Search

செய்தித்தாள்களில் மடித்து தரப்படும் உணவுப்பொருட்களால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி தெரியுமா?

 செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மையில் பல்வேறு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய சில இரசாயனங்கள் இருப்பதாக உணவு ஒழுங்குமுறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

FSSAI எனப்படும் இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு முகமையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி கமலா வர்தன ராவ், நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் மற்றும் உணவு விற்பனையாளர்கள் உணவுப் பொருட்களை பேக்கிங், பரிமாறுதல் மற்றும் சேமித்து வைப்பதற்கு செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு கடுமையாக வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

செய்தித்தாளில் உணவுப் பொருட்கள் மடிப்பதைஏன் தவிர்க்க வேண்டும்? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? விபரமாக பார்க்கலாம்.

FSSAI தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜி கமலா வர்தன ராவ், உணவுப் பொருட்களை மடிக்க  பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். செய்தி தாள் அச்சடிக்க பயன்படும் மை மனித உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அதில் பல்வேறு ரசாயனப் பொருட்கள் உள்ளன என்றும் ஏற்கனவே FSSAI அறிவுறுத்தியிருந்தது. அந்த அச்சு மை, உணவை மாசுபடுத்தும் என்றும் உட்கொள்ளும் போது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் கமலா வர்தன ராவ் எச்சரித்துள்ளார்.

மையில் ஈயம் மற்றும் கன உலோகங்கள் போன்ற இரசாயனங்கள் இருப்பதால், அவை பரிமாறப்படும் அல்லது செய்தித்தாளில் சுற்றப்பட்ட உணவுகள் மூலம் மனித உடலுக்குள் சென்று விடும். மேலும், உணவுப் பொருட்கள் மடிக்க பயன்படுத்தப்படும் செய்தித்தாள்கள் அடிக்கடி பல்வேறு சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால் அவை பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பிற நோய்க்கிருமிகளால் மாசுபடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இது உணவில் பரவும் நோய்களை ஏற்படுத்தக்கூடும்  என்றும் FSSAI எச்சரித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஒழுங்குமுறைகள் 2018-ல் இது குறித்து விளக்கமளித்துள்ளது. உணவைச் சேமிப்பதற்கும், பேக்கிங் செய்வதற்கும் அல்லது போர்த்துவதற்கும் செய்தித்தாள்கள் அல்லது அதை ஒத்த பொருட்களைப் பயன்படுத்துவதைத் இந்த பிரிவு தடைசெய்கிறது. எனவே விதிமுறைகளின்படி, நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்கள் உண்ணக்கூடிய பொருட்களை வழங்க செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வடை, சமோசா அல்லது பக்கோடா போன்ற வறுத்த உணவுகளிலிருந்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு செய்தித்தாள்களைப் பயன்படுத்தவும் கூடாது.

செய்தித்தாள்களை யாரும் உணவு பரிமாறவோ அல்லது பேக் செய்யவோ பயன்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்த FSSAI இப்போது மாநில உணவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. உணவுப் பொருட்களை மடிப்பதற்கு செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து, பாதுகாப்பான மாற்று வழிகளை ஊக்குவிப்பதன் மூலமும், நாட்டில் வழங்கப்படும் உணவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை FSSAI மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment