Search

வீட்டிற்குள் சுத்தமான காற்றை பெறுவது சாத்தியமா..? இந்த டிப்ஸை கவனியுங்கள்..!

இன்றைக்கு பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை காற்று மாசுபட்டுத்தான் கிடைக்கிறது. இயல்பை விட அதிகளவு காற்று மாசு ஏற்பட்டாலும் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதோடு ஆஸ்துமா, நுரையீரல் தொற்று, இதய நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளும் மக்களுக்கு ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே முடிந்தவரை சுத்தமானக் காற்றை சுவாசிக்க நாம் முயல வேண்டும்.

ஆனால் இது பொது இடங்களில் குறைவான அளவே என்றாலும், வீட்டிற்குள் இருக்கும் காற்றி சுத்தமாக வைத்துக் கொள்வது நம் அனைவரின் கடமை. இதோ அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

வீட்டினுள் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கான வழிமுறைகள்…

காற்றோட்டத்தை அதிகரித்தல்:நீங்கள் வீட்டிற்குள் இருக்கும் போது ஜன்னல் மற்றும் கதவை அடைத்து வைக்காதீர்கள். இதனால் உங்களது அறைக்குள் காற்று ஒட்டம் சரியாக இருக்காது. இதனால் ஈரமான வாசனை உங்களது அறைக்குள் சுற்றி வரும் என்பதால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாது. எனவே எப்போதும் வீட்டிற்குள் காற்று செல்லும் படியாக திறந்து வைத்திருப்பது அவசியம்.


வீட்டினுள் செடிகளை வளர்த்தல்: உங்களது வீட்டிற்குள் எப்போதும் சுத்தமாக காற்று உலா வர வேண்டும் என்றால் உள்ளே தாவரங்களை வளர்க்க வேண்டும். இது நச்சுத்தன்மையுள்ள காற்றை சுவாசித்து, வீட்டினுள் சுத்தமான ஆக்சிஜன் நிறைந்த காற்றை வெளியிடுகிறது. குறிப்பாக அல்லி, கற்றாழை, பீஸ் லில்லி, ஸ்பைடர் தாவரம் போன்ற தாவரங்களை வளர்க்கலாம்.

காலணிகளை வெளியில் வைத்தல்: சில வீடுகளில் காலணிகளை வீட்டிற்குள் உள்ளேயே வைப்போம். வெளி இடங்களுக்கு சென்று வருவதால் இதில் கிருமிகள் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே முடிந்தவரை உங்களது அறைகளுக்கு வெளியே செப்பல் மற்றும் சூக்களை வைத்திருக்க முயலுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் 50 சதவீதம் தொற்று நோய் அபாயத்தைக் குறைக்க முடியும்.

அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்துதல்: பெப்பர்மின்ட் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசிய எண்ணெய்கள் இனிமையான இயற்கை மணம் கொண்டவை என்பதால், இவற்றை அதிகளவில் நீங்கள் வீட்டிற்குள் உபயோகிக்கலாம். இவை நல்ல மணத்தை அளிப்பதோடு உடலுக்கும் புத்துணர்ச்சியாக உள்ளது.

உங்களது வீட்டினுள் உட்புறக் காற்றை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பிளாஸ்டிக் பொருள்களுக்குப் பதிலாக மரத்திலான செய்யப்பட்ட கூடைகள் போன்ற வீட்டிற்குத் தேவையான பொருள்களைப் பயன்படுத்த முயலுங்கள்.

முக்கியமான 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ள ஃபேன், ஏசி போன்ற சாதனங்களை எப்போதும் தூய்மையாக பராமரிக்க முயலுங்கள்.

தற்போது அனைவரின் வீடுகளிலும் செல்லப்பிராணிகள் நிச்சயம் ஏதாவது ஒன்று இருக்கக்கூடும். எனவே உங்களது செல்லப்பிராணிகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க முயலுங்கள். இதன் மூலம் நச்சுக்காற்று உங்களது வீட்டைச் சுற்றி வர வாயப்பில்லை.

இதோடு ஈரமான துணிகளை எப்போதும் வீட்டினுள் வைக்காதீர்கள். முடிந்தவரை வெயில் காயப் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதுப்போன்ற சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினாலே நீங்கள் வீட்டிற்குள் இருந்தாலும் ஆரோக்கியமான மற்றும் சுத்தமான காற்றை நீங்கள் சுவாசிக்க முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

 Click here to join whatsapp group for daily health tip

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி நிறைந்த டாப் 5 உணவுகள்!

 “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“ என்பார்கள். அதற்கேற்ப தான் நம்முடைய முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கை முறையை நடத்தி வந்தனர். ஆனால் இன்றைக்கு உள்ள தலைமுறையினரிடம் நல்ல உணவுப் பழக்கம் என்பது கிடையாது. இதனால் தான் பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் அல்லது பிற நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுகளால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு பல உடல் நல பிரச்சனைகளையும் நாம் சந்திக்க நேரிடுகிறது. அதிலும் தற்போது க்காலம் மற்றும் குளிர்காலம் ஆரம்பித்து விட்டதால் பலவிதமானத் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்ற சூழலில் வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அவை என்னென்ன என்பது? குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்…

ஆரஞ்சு: வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருள்களில் முக்கியமானது ஆரஞ்சு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிட்ரஸ் பழமான ஆரஞ்சில், உடலின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் திறன் உள்ளது. இதோடு கொலாஜனை அதிகரிக்கவும், சரும பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது. 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் 53.2 மில்லிகிராம் வைட்டமின் சி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ப்ரோக்கோலி: இலைக்காய்கறியான ப்ரோக்கோலி வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இதோடு நார்ச்சத்து, புரதம் மற்றும் பொட்டாசியம் போன்ற பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே இதை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கேல் கீரை: கேல் கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. 100 கிராம் கேல் கீரையில் 120 mg வைட்டமின் சி இருப்பதாக கூறப்படுகிறது. இதோடு வைட்டமின்கள் ஏ, கே மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்களும் உள்ளது.

ஸ்ட்ராபெர்ரிகள்: வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் நிறைந்துள்ள பழங்களில் ஒன்று தான் ஸ்டராபெர்ரிகள். இந்த பழங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு புற்றுநோய், நீரழிவு நோய், பக்கவாதம் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியில் கிட்டத்தட்ட 90 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. இதோடு மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

தக்காளி: தக்காளியில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதோடு பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் ஈ போன்ற பிற ஊட்டச்சத்துகள் இதில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இதோடு பச்சை மிளகாய், கிவி பழம், எலுமிச்சை,கொத்தமல்லி போன்ற உணவுப் பொருள்களிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் உள்ளது.

 Click here to join whatsapp group for daily health tip

இரவு டின்னருக்கு இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் தூக்கம் வராதாம்..!

 இன்றைய இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள் வரை பலரும் தூக்கம் வராமல் அவதிப்படுகின்றனர். தூக்கமே தலையாய பிரச்சனையாகவும் உருவெடுத்து வருகிறது. அப்படி தூக்கம் வராமல் சிரமப்பட இந்த உணவுகள் கூட காரணமாக இருக்கலாம். ஏனெனில் இந்த உணவுகளுக்கு தூக்கத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி இரவு உணவுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன பார்க்கலாம்.

டீ : பலருக்கும் சாப்பிட்ட உடன் டீ , காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் அதை இரவிலும் கடைப்பிடிக்கிறீர்கள் எனில் அது தூக்கத்தை பாதிக்கும். டீ, காஃபி மட்டுமன்றி சாக்லெட், கோலா பானங்களை குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். காரணம் இவற்றில் உள்ள கஃபைன் மூளையை பாதித்து உங்கள் தூக்கத்தையும் பாதிக்கும். நீண்ட நேரம் விழிப்போடு வைத்திருக்கும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் : ஒமேகா 3 போன்ற நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் தூக்கத்தை கடுமையாக பாதிக்கும். அப்படி நெய், வெண்ணெய் நிறைந்த உணவுகள், குக்கீஸ் போன்றவற்றை இரவு சாப்பிடுவதை தவிருங்கள்.

சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் : பாஸ்தா, பிரட் என மைதா மாவை பிரதானமாக கொண்டு சமைக்கப்படும் உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. இவை தூக்கமின்மையை பாதிக்கும். அதேசமயம் செரிமானத்தையும் குறைக்கும்.

வைட்டமின் குறைபாடு கொண்ட உணவு : எப்போதும் நாம் சாப்பிடும் உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும் என்பார்கள். அப்படி சம அளவிலான ஊட்டச்சத்து உணவு இல்லை என்றாலும் தூக்கம் தடைபடும். எனவே வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை இரவிலும் உட்கொள்ளுங்கள். குறிப்பாக வைட்டமின் கே, கால்சியம் , இரும்பு, வைட்டமின் டி , மக்னீசியம் போன்ற சத்துக்களை தவறாமல் உட்கொள்ளுங்கள்.

காரமான உணவுகள் : மசாலா , கார உணவுகளை இரவில் உட்கொள்ளும்போது அது செரிமானத்தை கடுமையாக பாதிக்கும். அந்த வகையில் நெஞ்சு எரிச்சல், அஜீரணக்கோளாறு காரணமாகவும் உங்களுக்கு தூக்கம் தடைபடலாம்.

உணவுக்கு பின் இடைவேளை அவசியம் : பொதுவான இரவு உணவையே 9 மணிக்கு முன் சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். அப்படி சாப்பிட்ட பின் குறைந்தது 2 மணி நேரமாவது ஓய்வு எடுத்த பின் தூங்கச் செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் சாப்பிட்ட உடனே உறங்கச் சென்றால் புற்றுநோய் ஆபத்து கூட வரலாம் என ஆய்விலும் நிரூபித்துள்ளனர். எனவே மிதமான உணவு மட்டுமன்றி தூங்குவதற்கு முன் போதுமான இடைவேளையும் அவசியம்.


 Click here to join whatsapp group for daily health tip

எப்பவுமே நெகடிவ்வாகவே யோசிக்கிறீர்களா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க.. பாசிட்டிவா மாறுங்க!

 இந்த விஷயம் நடக்கும், இதற்கு பாசிடிவ்வாக சிந்திக்க வேண்டும் என்று சொல்வது மிகவும் எளிது!  இயல்பாகவே நம்முடைய மனம் மற்றும் மூளை எதிர்மறையான விஷயத்தை கிரகித்துக்கொள்ளும்படி தான் படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விஷயம் நடக்காது, இது கிடைக்காது என்று நெகட்டிவ் ஆன ஏதாவது ஒரு உணர்வு தோன்றினால் அந்த விஷயம் நடந்துவிடும். ஆனால் அதுவே ஒரு விஷயம் நடக்க வேண்டும், ஏதேனும் ஒன்று கிடைக்க வேண்டும், இந்த வாய்ப்பு என்னுடையது என்று பாசிட்டிவாக நினைக்கும் பொழுது அதை நாம் பாசிட்டிவ் ஃஅபர்மேஷன் என்று திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய மனம், நல்ல விஷயங்களை முழுமையாக நம்பாது.

இவ்வாறு எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளை ஒரு நபரை அதிகமாக ஆட்கொள்கின்றன. இந்த எதிர்மறையான சிந்தனைகள் இயல்பாகவே நமக்கு உள்ளே ஊறிவிடுவதால் இதனை தவிர்ப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் எதிர்மறையான சிந்தனைகள் நம்முடைய செயல்களையும் பாதிக்கிறது.

நம்முடைய சிந்தனைகள் நம்முடைய உணர்வுகளை பாதிக்கிறது; நம்முடைய உணர்வுகள் நம்முடைய செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது; நம் செயல்களில் ஏற்படும் தாக்கம் சிந்தனைகளை மீண்டும் பாதிக்கிறது. இது ஒரு முக்கோண சங்கிலியாக இது தொடர்ந்து வருகிறது. எனவே நம்முடைய செயலும் சிந்தனையும் உணர்வும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்று மன நல நிபுணர்கள் கூறுகின்றனர்.

முழு கவனத்துடன் ஒரு வேலையை செய்து வரும் செய்து கொண்டிருக்கிறோம். சின்ன ஒரு கவனச் சிதறல் மூலம் ஏதாவது ஒரு நெகட்டிவ் ஆன ஒரு விஷயம் அல்லது மோசமான ஒரு அனுபவம் பற்றிய நினைவு வரும் பொழுது அது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகப்பெரிய தொந்தரவை ஏற்படுத்தி வேலையைத் தடை செய்யும். எனவே எதிர்மறையான சிந்தனைகள் வராமல் தடுப்பது எப்படி என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

எதிர்மறையான சிந்தனைகளை தவிர்ப்பது என்பது நாம் இதையெல்லாம் சிந்திக்கவேண்டும் இதையெல்லாம் சிந்திக்கக் கூடாது என்று நேரடியான கட்டுப்பாட்டை விதிக்க முடியாது. ஆனால் நாம் எவ்வாறு சிந்திக்கிறோம், எந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள போகிறோம் கண்டிப்பாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ள முடியும்.

அரைகுறை சிந்தனைகளை தவிர்ப்பது

எல்லாருமே எல்லா விஷயங்களிலும் தெளிவாக சிந்திக்க முடியாது. ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்கும் போது, கவனச்சிதறலைக் கட்டுப்படுத்தி நம்முடைய சிந்தனைகளை ஒருங்கிணைத்து, அதிலிருந்து மீண்டு வருவது என்பது மிகவும் சவாலானது. ஏற்கனவே நாம் எதிர்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் நம்முடைய மூளை நம்மை பாதுகாக்கும். உதாரணமாக நாம் ஒரு சவாலான ஒரு விஷயத்தை எதிர்கொண்டிருக்குறோம்; அதேபோல மற்றொரு சம்பவத்தை எதிர்கொண்டால், அதிலிருந்து நம்மை பாதுகாக்க மூளை நமக்கு வழக்கத்தை விட அதிகமாக பயத்தை ஏற்படுத்தும். எனவே, இவ்வாறு அரைகுறையாக ஏதேனும் ஒரு விஷயத்தை பற்றி சிந்திப்பதை தவிர்த்து விடுங்கள். இல்லை என்றால், அதிக அச்சம், எதிர்மறையான சிந்தனைகளை உண்டாக்கும்.

ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்

குழந்தைகள் இடத்திலேயே ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பார்க்க கூடாது என்று கூறும் வழக்கமிருக்கிறது. பள்ளியில், படிப்பில், விளையாட்டில் என்று எந்த விஷயத்திலேயும் ஒருவரை ஒப்பிட்டு மற்றவருடைய திறனை தீர்மானிக்க கூடாது. ஒருவர் இப்படி நடந்து கொள்கிறார், நீ ஏன் இப்படி செய்யவில்லை என்று எந்த அடிப்படையிலும் கேட்கவே கூடாது. இவ்வாறு தொடர்ந்து மற்றவர்களுக்கு இதை சொல்வது மட்டுமல்ல, அதையே நாமும் செய்ய வேண்டும். நம்மை மற்றவருடன் ஒப்பிடும் பொழுது தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் நமக்கு திறமை இல்லையா என்ற சந்தேகமும் எழ தொடங்கும்.

ஒவ்வொரு நபரும் தனித்தன்மை வாய்ந்த திறன்கள் இருக்கின்றன. எனவே உங்களுடைய கடந்த காலத்தில் நீங்கள் எவ்வாறு இருந்திருக்கிறீர்கள் மற்றும் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதை மட்டும் கவனித்தால் போதும். உங்களையே நீங்கள் ஒரு போட்டியாளராக ஒப்பிட்டுக் கொள்ளுங்கள், மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம்.

உங்கள் பலம் மற்றும் திறமைகள் மீது கவனம் செலுத்துங்கள்

நம்முடைய குறைகளையும் பலவீனங்களையும் நாம் திரும்பத் திரும்ப நினைத்து கொண்டே இருக்கும் பொழுது எதிர்மறையான சிந்தனைகள் அதிகமாகத் தோன்றும். நெகட்டிவான எண்ணங்களை தவிர்ப்பதற்கு உங்களுடைய குறைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்காமல் உங்களுடைய திறமைகள் என்ன, எதில் நீங்கள் சிறந்தவர் நீங்கள் செய்யும் எந்த விஷயம் சிறப்பாக இருக்கும் என்று உங்களுடைய பலத்தின் மீதும் திறமைகள் மீதும் கவனம் செலுத்துங்கள். இது வாழ்வில் உங்களுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.

என்ன செய்ய முடியும் என்பதை குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள் :  

எல்லோருக்குமே வாழ்வில் பல ஆசைகள், குறிக்கோள், லட்சியம் ஆகிய அனைத்துமே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இது எல்லாம் நியாயமே இல்லை, நடைமுறைக்கு சாத்தியப்படாது என்று அவர்களுக்கே தோன்றும். அவ்வாறு நீங்கள் நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயங்களை உங்கள் குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டாம். எதை உங்களால் உடனடியாக அல்லது சிறிது காலத்தில் செய்ய முடியுமோ அதை உங்கள் குறிக்கோளாக மாற்றி அதை நோக்கி செயல்படுங்கள். அதை அடைந்த பிறகு உங்களுடைய குறிக்கோளை பெரிதாக்கி கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது எங்களுடைய குறிக்கோளாக இருந்தால், முதல் நாளிலேயே உங்களால் 10,000 அடிகள் நடக்க முடியாது. அல்லது முதல் ஓரிரு நாட்கள் நடந்தால் மூன்றாவது நாள் கால்கள் வீங்கி விடும். எனவே கொஞ்சம் கொஞ்சமாக முதல்நாள் 2000 படிகள், இரண்டாம் வாரம் 3000 படிகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய இலக்கை அதிகரித்துக் கொள்ளலாம்.

தேவைப்பட்டால் உதவி பெறுங்கள்: 

ஒரு சிலருக்கு உடல் நல பிரச்சினைகள் அல்லது மன ரீதியான தொந்தரவுகள் காரணமாக எதிர்மறையான எண்ணங்கள் தோன்றலாம் அல்லது நெருங்கியவரின் இழப்பு பிரிவு இடமாற்றம் ஆகிய பல விஷயங்களுமே எதிர்மறையான சிந்தனைகளை அதிகரிக்கலாம். எனவே ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக எதிர்மறையான சிந்தனைகள் அதிகமாக தோன்றும் பொழுது மருத்துவரின் அல்லது மனநல ஆலோசகரின் உதவியை பெறுவதில் தவறில்லை.


 Click here to join whatsapp group for daily health tip

தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கனும்... ஆனால் முடியலையா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

 வாக்கிங் என்பது உடல் எடையை குறைக்க மற்றும் ஆரோக்கியமாக இருக்க உதவும் எளிதான மற்றும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். வாக்கிங் போவதால் கிடைக்கும் அதிகபட்ச நன்மைகளை பெற நன்றாக நடக்க கூடிய ஒரு நபர் தனது உடல் எடையை பெருட்படுத்தாமல் தினசரி சுமார் 10,000 ஸ்டெப்ஸ்கள் நடக்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

10,000 ஸ்டெப்ஸ் விறுவிறுப்பான வாக்கிங் அல்லது தினசரி 30 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபட கூறுகிறார்கள் நிபுணர்கள். ஆனால் உடல் எடையை குறைக்க நினைக்கும் பலரும் வாக்கிங் போவதில் ஆர்வம் காட்டினாலும், 10,000 ஸ்டெப்ஸ்கள் வாக்கிங் செல்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். பொதுவாக வாக்கிங் என்பது ஒரே ஸ்ட்ரெச்சில் செல்ல வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நேரத்தை அவரவர்க்கேற்ற மாதிரி அட்ஜஸ்ட் செய்து கொண்டு ஒருநாளில் இவ்வளவு தூரம் அல்லது நேரம் வாக்கிங் போகும் இலக்கை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

விறுவிறுப்பான வாக்கிங் செரிமானத்திற்கு உதவுவதோடு பெரிய நோய்க அபாயங்களில் இருந்து நம்ம பாதுகாக்கும். சரி, நீங்கள் 10,000 ஸ்டெப்ஸ்கள் வாக்கிங் போக முடிவு செய்து விட்டீர்கள் என்றால் உங்கள் அன்றாட வாழ்வில் இதை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

மாடிப்படிகளில் ஏறி செல்ல பழகுங்கள்: அலுவலகம் மற்றும் குடியிருப்பு என நாம் புழங்கும் பெரும்பாலான இடங்களில் லிஃப்ட் வசதி இருக்கிறது. 2 மாடிகள் ஏறி செல்ல வேண்டும் என்றால் கூட பலரும் படிகட்டுகளை பயன்படுத்தாமல், லிஃப்ட் பயன்படுத்துகிறார்கள். எனவே கூடுமான வரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் அலுவலகம், அப்பார்ட்மென்ட் என லிஃப்ட் இருக்கும் இடங்களில் அதனை பயன்படுத்தாமல், படிகளில் ஏறி செல்லுங்கள். மேலும் படிக்கட்டுகளில் நடப்பது இதய உடற்பயிற்சிக்கான இலக்கை அடைய உதவும்.

45 நிமிடங்களுக்கு ஒருமுறை: பகல் நேரத்தில் 45 நிமிடங்களுக்கு ஒருமுறை 3 - 5 நிமிடங்கள் இருக்கும் இடத்திலேயே வாக்கிங் செல்ல உங்கள் மொபைலில் ஒரு ரிமைன்டரை செட் செய்து கொள்ளுங்கள். அலாரம் அடித்தவுடன் அதை ஆஃப் செய்யாமல் என்ன வேலையாக இருந்தாலும் சில நிமிடங்கள் நடக்க வேண்டும் என்று உறுதி கொள்ளுங்கள்.

நண்பர் அல்லது செல்ல பிராணிகளுடன்... வாக்கிங் செல்ல சோம்பேறித்தனமாக இருக்கும் போது உங்கள் நண்பர் மற்றும் செல்ல பிராணிகளுடன் வாக்கிங் செல்வதற்கு முன்னுரிமை கொடுங்கள். அதிகாலை அல்லது மாலை நேரம் நண்பர்களுடன் நீங்கள் செல்லும் வாக்கிங் உங்களை உற்சாகமாக வைக்கும்.

பார்க்கிங்: நீங்கள் அலுவலகம், ஷாப்பிங் என வெளியிடங்களுக்கு எங்கு சென்றாலும் பைக் அல்லது காரை பார்க் செய்யும் போது சற்று தூரத்தில் நடந்து சென்று வாகனத்தை எடுத்து செல்லும் வகையில் பாதுகாப்பான இடத்தில பார்க்கிங் செய்யுங்கள். இந்த பழக்கம் வாகனத்தை விட்டு நீங்கள் செல்லும் போது மற்றும் வாகனத்தை எடுத்து செல்லும் போது நீங்கள் குறிப்பிட்ட தூரம் நடப்பதை உறுதி செய்கிறது.

லஞ்சிற்கு பிறகு குட்டி வாக்கிங்: பெரும்பாலான நிறுவனங்கள் மதிய உணவை சாப்பிட 30 - 45 நிமிடங்கள் இடைவேளை வழங்குகின்றன. இந்த இடைவேளையை வாக்கிங் செல்ல பயன்படுத்தி கொள்ளலாம். 20 நிமிடங்களுக்குள் மதிய உணவை சாப்பிட்டு முடித்து விட்டு, மீதி இருக்கும் இடைவேளை நேரத்தில் மிதமான வாக்கிங் செல்வது தினசரி வாக்கிங் இலக்கை அடைய உதவும்.

போன் பேசும் போது நடக்கலாம்: வேலை நேரத்தில் பெரும்பாலும் 8 - 9மணி நேரம் உட்கார்ந்தே இருக்கும் சூழலில், மொபைலில் பிறருடன் பேசும் போது படுக்கையில் படுத்து கொண்டு அல்லது உட்கார்ந்து கொண்டு பேசாமல் வீட்டிற்குள் அல்லது மாடியில் நடந்து கொண்டே பேசலாம்.


 Click here to join whatsapp group for daily health tip

உடல் பருமனாக இருப்பது எதுவரை ஆரோக்கியமானது - எப்போது ஆபத்தாக மாறுகிறது?

 உலகம் முழுவதிலுமே உடல் பருமன் தீவிரமான பிரச்னைகளுக்கு ஆணிவேராக இருந்து வருகிறது. நீரிழிவு நோய், தைராய்டு கோளாறு, இதய நோய், எலும்பு தேய்மானம் என்று பல விதமான பாதிப்புகளுக்கு உடல் பருமன் ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. ஆனால் பலருக்கும் இயல்பிலேயே பூசினாற் போல உடல்வாகு கொண்ட, chubby ஆன தோற்றம் இதெல்லாம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. இவ்வாறு இருப்பவர்கள் மற்றும் குண்டாக இருப்பவர்கள் எல்லாருக்குமே நோய்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை. எந்த அளவுக்கு வரை உடல் பருமன் அல்லது பூசிய உடல்வாகு இருப்பது ஆரோக்கியமானது, எது ஆபத்தானது என்று இங்கே பார்க்கலாம்.

வளர்சிதை மாற்றம் ஆரோக்கியமாக இருந்தால், உடல் பருமன் ஆபத்தல்ல

உடலின் வளர்சிதை விகிதம் ஆரோக்கியமாக இருந்தால், உடல் பருமன் ஆபதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மரிங்கோ QRG மருத்துவமனையின், இன்டர்னல் மெடிசின் துறையில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றி வரும் மருத்துவர் அனுராக் அகர்வால், இதைப்பற்றி விளக்கியுள்ளார். உடலில் கொழுப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பாடி மாஸ் இன்டக்ஸ் என்பதம் மூலம் கணக்கிடலாம். BMI 30க்கும் மேல் இருந்தால், அதிக கொழுப்பும், வளர்சிதை மாற்ற விகித ரீதியாக ஆரோக்கியம் அற்றவர் என்று கருதப்படும்.

ஆனால், BMI அதிகமாக இருந்தாலும், மெட்டபாலிக் ஹெல்த்தி ஓபிசிட்டி (வளர்ச்சிதை மாற்ற விகிதத்தின் அடிப்படையில் ஆரோக்கியமான உடல்பருமன்) என்று வரும் போது, அதற்குரிய விதிகள் பொருந்தாது. இத்தகைய நபர்களுக்கு குறைவான வைஸ்சிரல் கொழுப்பு, அதிக சப்குடேனியஸ் கொழுப்பு, அதிக கார்டியோ ரெஸ்பிரேட்டரி திறன், சாதாரண இன்சுலின் உணர்திறன் உடன் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும், உடலில் அழற்சி ஏற்படும் காரணங்கள் ஆகியவை குறைவாக இருக்கும் என்று விளக்கினார்.

உடல் பருமன் வேறு சில நோய்களை ஏற்படுத்தலாம்

குருகிராமில் உள்ள மெடண்டா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சைக்கான மூத்த ஆலோசகர், மருத்துவர் விகாஸ் சிங்க்ஹால் இதைப் பற்றி கூறுகையில், உடல் பருமனமாக இருப்பவர்களுக்கு மெடபாலிசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதை, உடல்பருமன் ஆரோக்கியமானது என்று கருதக்கூடாது என்று தெரிவித்தார்.

உடல்பருமன் ஆரோக்கியமானது, ஆபத்தல்ல என்பதை தவறான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளக்கூடாது. வளர்ச்சிதை மாற்றம் சம்மந்தப்பட்ட அறிகுறிகள் இல்லை என்றாலும் கூட, இத்தகைய நபர்கள் இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். கார்டியோ வாஸ்குலார் நோய்களால் பாதிக்கப்படாமல் இருந்தால் கூட, கல்லீரல் வீக்கம், தூக்கமின்மை, எலும்புகள் மற்றும் ஜவ்வு பிரச்னைகள், மலட்டுத்தன்மை, மன ரீதியான பாதிப்புகள் ஆகியவை ஏற்படலாம் என்று தெரிவித்தார்.

எலும்புகள், நுரையீரல் பாதிக்கப்படும் அபாயம் அதிகம்

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மெட்டபாலிசம் நன்றாக இருந்தாலுமே அவர்களுக்கு வேறு சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, நுரையீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அதுமட்டுமல்லாமல் ஸ்லீப் அப்னியா என்று கூறப்படும் தூக்கம் தடைபடும் பிரச்சனை ஏற்படலாம். ஒபீசிட்டியால் நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படவில்லை என்றால் கூட எலும்புகள் பலவீனம் மற்றும் எலும்புகளில் துளைகளைக் குறிக்கும் ஆஸ்டியோ-ஆர்த்தரைட்டிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

உடல் பருமன் ஏற்படாமல் தடுக்க, குறைக்க என்ன வழி?

உடல் பருமனைப் பொறுத்தவரை நீங்கள் எவ்வளவு கலோரிகள் சாப்பிடுகிறீர்கள் மற்றும் எந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்ற இரண்டு அளவீடுகள் தான் முக்கியமானவை. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக்கொண்டு நார்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது மற்றும் தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது போதும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இவை இரண்டுமே உங்களுடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.



Click here to join whatsapp group for daily health tip

உடலுக்கு ஆரோக்கியமா இனிப்பு? சர்க்கரை Vs வெல்லம்: இரண்டில் எது சிறந்தது?

 காலை காபி & டீ-யில் துவங்கி இரவு தூங்க செல்லும் முன் குடிக்கும் பால் வரை சர்க்கரையை நாம் அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்தி வருகிறோம். அதிலும் வெள்ளை வெளேரென்று இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை தான் பலரது விருப்பமாக இருந்து வருகிறது.

எனினும் தினசரி நாம் எடுத்து கொள்ளும் அதிக சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை ஹை பிளட் பிரஷர், எடை அதிகரிப்பு, நீரிழிவு, கொழுப்பு கல்லீரல் மற்றும் இதய நோய்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளின் அபாயங்களை அதிகரிக்கிறது. எனவே சர்க்கரை அல்லது சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்துவது பல்வேறு உடல்நல கோளாறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை பயன்படுத்த பலரும் பரிந்துரைக்கிறார்கள்.

வெள்ளை சர்க்கரை என்பது பீட் அல்லது கரும்பு சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையாகும். அதே நேரம் வெல்லம் சுத்திகரிக்கப்படாத கரும்பு சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக சர்க்கரை கடுமையான செயல்முறைகள் மூலம் தயாரிக்கப்படுவதால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் போய்விடுகின்றன. ஆனால் வெல்லம் கரும்பு பாகை கொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது மற்றும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல நிறைந்துள்ளன என கூறப்படுகிறது. இந்நிலையில் நாம் வெள்ளை சர்க்கரை அல்லது வெல்லம் எதை பயன்படுத்த வேண்டும்..? சர்க்கரையைத் தவிர்க்க வேண்டுமா? போன்ற பல கேள்விகளுக்கு பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில் விளக்கம் அளித்துள்ளார்.

வெல்லம் சர்க்கரைக்கு மாற்று இல்லை. வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்புகளில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தை சேர்ப்பது, உணவுகளை சுவையாக மற்றும் ஆரோக்கியமானதாக மாற்றும் என்று பலர் நினைக்கலாம். இருப்பினும் நிபுணரின் கருத்துப்படி இது முற்றிலும் உண்மை இல்லை. வீடுகளில் வெல்லம் மற்றும் சர்க்கரையின் பயன்பாடு வெவ்வேறு சீசன்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

வெல்லம் அல்லது சர்க்கரை என்று கேப்ஷன் கொடுத்துள்ள போஸ்ட்டில் அவர் கூறியிருப்பதாவது, "சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை வெறுமனே இனிப்புகளில் பயன்படுத்துவது ஆரோக்கியமான தேர்வாக இருக்காது . நீங்கள் இவற்றை சீசனுக்கு ஏற்ப எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெல்லம் குளிர்காலத்தில் உட்கொள்ள ஏற்றது, அதுவே கோடை என்றால் சர்க்கரை மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிட்டுளார்.

இதனிடையே மற்றொரு இன்ஸ்டா போஸ்ட்டில் சர்க்கரையைத் தவிர்ப்பது மற்றும் எந்த வகையான சர்க்கரை உடலுக்கு ஆரோக்கியமற்றது என்பதைப் பற்றி கூறி இருக்கிறார். பேக்கேஜ்ட் ஃபுட் மற்றும் அல்ட்ரா-ப்ராசஸ்டு ஃபுட்களில் இருக்கும் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.


Click here to join whatsapp group for daily health tip

சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு வராமல் இருக்கணுமா? காலையில் இந்த ஒரு விஷயத்தை சரியா பண்ணுங்க போதும்!

 

காலையில் எழுந்த உடனேயே பெரும்பாலான மக்கள் கவலைப்படும் முதல் விஷயம் பெரும்பாலும் காலை உணவாகத்தான் இருக்கும்.

மேலும் நீங்கள் நாளின் தொடக்கத்தில் செய்யும் முதல் நல்ல வேலையாக உங்கள் காலை உணவை எடுத்துக்கொள்வதுதான் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் தூங்கும் போது சராசரியாக 6-8 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து, நாளை சரியாகத் தொடங்குவதற்கான ஆற்றலைப் பெறுவதற்கு சாப்பிடுவது அவசியம்.

ஆரோக்கியமான மற்றும் நிறைவான காலை உணவு என்பது உங்கள் உடல் ஆற்றலை ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களால் நிரப்பி மீண்டும் வேலைக்குச் செல்வதற்கு தேவையான ஊக்கத்தை அளிக்கிறது. காலை உணவை ஏன் அவசியம் உண்ண வேண்டும் அதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


எடைக்குறைப்பிற்கு உதவும்

அதிக எடையைக் குறைக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், காலை உணவைத் தவிர்ப்பது நீங்கள் செய்யும் பெரிய தவறாகும். எழுந்தவுடன் சக்தி நிறைந்த, ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்ளும் பழக்கம் நாள் முழுவதும் உங்கள் பசி வேதனையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது மேலும் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது மற்றும் உங்களின் மற்ற உணவுகளுக்கு வரும்போது சத்தான உணவுகளை தேர்ந்தெடுக்க உதவுகிறது. எனவே நீங்கள் உங்கள் எடையைக் கண்காணிக்கிறீர்கள் என்றால், சத்தான காலை உணவுதான் உடல் பருமனைத் தடுக்க ஒரே வழி என்பதை மறந்து விடாதீர்கள்.

இதயத்திற்கு நல்லது

ஆரோக்கியமான காலை உணவு உங்கள் நாளை சிறப்பாக தொடங்குவது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு, நீண்ட காலத்திற்கு இதய நோயால் பாதிக்கப்படும் அபாயத்தையும் குறைக்கிறது. காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு தமனிகள் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் பல போன்ற பிற வாழ்க்கை முறை நோய்களுக்கான கதவைத் திறக்கிறது, இது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்திற்கு வழிவகுக்கிறது.

சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது

காலை உணவை உட்கொள்வது நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன, ஏனெனில் இது உங்கள் இரத்தத்தில் உள்ள இன்சுலின் ஸ்பைக்கைக் குறைக்கிறது மற்றும் இன்சுலின் எதிர்ப்பைத் தடுக்கிறது. மறுபுறம், வழக்கமாக காலை உணவை தவறவிடுவது, தொடர்ச்சியான இன்சுலின் எதிர்ப்பால் ஏற்படும் டைப் 2 நீரிழிவு நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம். காலை உணவைத் தவிர்ப்பதன் மூலம், உங்கள் உடலின் இன்சுலின் அளவைக் குறைக்கவும், மதிய உணவிற்குப் பிறகு மீண்டும் கூர்மையாக அதிகரிக்கவும் அனுமதிக்கிறீர்கள். இது டைப் 2 நீரிழிவு நோயைப் பெறுவதற்கான மிகவும் சுலபமான வழியாகும்.

மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது

நீங்கள் காலை உணவை தவறாமல் சாப்பிட்டால், உங்கள் மூளைக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். மேலும் காலை உணவை தவறாமல் எடுத்துக் கொள்ளும்போது உங்கள் குறுகிய கால நினைவாற்றல் மேம்படுத்தப்படுவதை நீங்கள் கவனிப்பீர்கள், மேலும் செறிவு மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிப்பதை உணர்வீர்கள்.

ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க உதவுகிறது

நீங்கள் காலை உணவைத் தவிர்க்கும் போதெல்லாம், நீங்கள் வழக்கத்தை விட அதிக பசியை உணர ஆரம்பிக்கிறீர்கள் மற்றும் ஜங்க் ஃபுட் மீது அடிக்கடி ஈர்க்கப்படுவீர்கள். இது சோர்வின் நேரடி விளைவாகும், பசி மற்றும் ஆற்றல் குறைவாக இருப்பதால் வருகிறது. எனவே உங்கள் இரத்த சர்க்கரை, இன்சுலின் மற்றும் ஆற்றல் அளவை சிறந்த முறையில் நிலையானதாக வைத்திருக்க எப்போதும் ஒரு ஆரோக்கியமான காலை உணவை உண்ணுங்கள். காலை உணவை உண்பது உங்கள் உடலின் குளுக்கோஸ் அளவை மீட்டெடுப்பதால், நாள் முழுவதும் மூளை சீராக செயல்பட உதவுகிறது. இந்த வழியில், சரியான நேரத்தில் காலை உணவை சாப்பிடுவதை வழக்கமாக்குவதன் மூலம், உங்கள் வளர்சிதை மாற்றத்தை சரியான முறையில் அதிகரிக்கிறீர்கள்.

வளர்சிதை மாற்றம்

நீங்கள் காலையில் எழுந்ததும், உங்கள் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது, எனவே உங்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு தேவை, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை கிக்ஸ்டார்ட் செய்ய உங்களுக்கு ஆற்றலை வழங்கும். உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க, எழுந்தவுடன் குறைந்தது 2 மணி நேரத்திற்குள் காலை உணவை சாப்பிட முயற்சிக்கவும்.



 Click here to join whatsapp group for daily health tip

டிஜிட்டல் ஸ்கிரீன்களில் மூழ்கியிருக்கும் உங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

 இன்றைய சூழலில் டிஜிட்டல் ஸ்க்ரீன் பயன்படுத்தாத நபர்கள் உண்டா? அப்படி இருந்தால் அபூர்வம் தான். முன்பெல்லாம் அலுவலகப் பணி செய்பவர்கள் மட்டுமே டிஜிட்டல் ஸ்கிரீன்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. பில்லிங் கவுண்டர் முதல் குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் வரையில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் மயம் தான்.

கம்ப்யூட்டர், லேப்டாப் சவகாசமே இல்லாத சாமானிய நபர்கள் கூட மொபைல் ஃபோன்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். ஆக யார் ஒருவரும் டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்படுத்துவதை தவிர்க்க இயலாத சூழல் நிலவுகிறது. அதே சமயம், டிஜிட்டல் ஸ்க்ரீன்களை பார்ப்பதால் நம் கண்களில் ஏற்படக் கூடிய வறட்சி மற்றும் இதர பாதிப்புகள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஆண்டுதோறும் உலக அளவில் 2 மில்லியன் மக்கள் கண் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனராம். குறிப்பாக இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்படுகின்றது. 50 வயதை ஒட்டியவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களில் 66 சதவீதம் பேருக்கு காட்ராக்ட் பிரச்சினை வருகிறது. கண் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் க்ளகோமா பிரச்சினையாலும் பாதிக்கப்படுகின்றனர்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு கூடுதலாக டயபெடிக் ரெடினோபதி என்னும் நோய் உடன் வந்து சேருகிறது. மேற்குறிப்பிட்ட நோய்கள் எல்லாமே கண் பார்வைக்கு சிக்கல் ஏற்படுத்தக் கூடியவை. ஆனால், டிஜிட்டல் ஸ்கிரீன்களை பார்ப்பதால் பார்வை இழப்பு என்பதெல்லாம் ஏற்பட்டு விடாது என்றாலும், கண் வலி மற்றும் வறட்சி போன்றவை ஏற்படும்.

சராசரியாக, ஒரு மனிதனின் கண்கள் நிமிடத்திற்கு 15 முறை இமையை சிமிட்டுகின்றன. ஆனால், டிஜிட்டல் ஸ்கிரீன்களை நாம் வைத்த கண் மாற்றாமல் பார்த்துக் கொண்டிருப்பதால் இந்த சிமிட்டல் வெகுவாகக் குறைந்து விடுகிறது. இதன் எதிரொலியாக கண் வறட்சி, அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

என்னதான் தீர்வு

கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதற்காக இன்றைக்கு நாம் லேப்டாப்களையும், மொபைல் ஃபோன்களையும் ஓரம்கட்டி வைத்து விட முடியுமா? வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்த காலம் போய் இப்போது நாம் வேலை செய்வதற்கான சாதனங்களாக செல்ஃபோன்களே கூட மாறி விட்டன.

கல்வி பயில, வர்த்தகம் செய்ய என நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து விட்ட டிஜிட்டல் சாதனங்களை நாம் இனி புறம்தள்ள முடியாது. அதே சமயம் நம் கண்களை தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டாக வேண்டும். அதற்குத் தான் 20-20-20 என்ற தீர்வை மருத்துவர்கள் முன்வைக்கின்றனர்.

அதாவது, டிஜிட்டல் ஸ்கிரீன்களை பார்த்துக் கொண்டிருக்கும்போது 20 நிமிடத்திற்கு ஒருமுறை 20 நொடிகளுக்கு 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களின் மீது பார்வையை செலுத்த வேண்டும். இப்படி செய்வதால் நம் கண்களுக்கு வறட்சி ஏற்படுவது தடுக்கப்படும்.


சுற்றுலா செல்லும் போது அதிகமாக செலவாகிறதா..? பணத்தை மிச்சப்படுத்தும் சூப்பர் ஐடியாஸ்..!

 பயணம் செய்வது யாருக்கு தான் பிடிக்காது. பண்டிகை அல்லது விடுமுறை வந்துவிட்டாலே எங்காவது ஊர் சுற்றி பார்க்க கிளம்ப வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் தோன்றும். ஆனால் பயண டிக்கெட், தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட செலவுகளை கணக்கிட்டு பார்க்கும் போது பட்ஜெட் கட்டுப்படியாகாமல் அப்படியே விட்டு விடுவோம். அதேபோல் பலரும் தினமும் ஒரே மாதிரியாக செய்து வரும் வேலையை விட்டு, விட்டு ஜாலியாக உலகத்தை சுற்றி வர விரும்புவார்கள், ஆனால் அவர்களுக்கு இருக்கும் பொருளாதார சூழ்நிலை காரணமாக அது சாத்தியமில்லாமல் போய்விடும்.

ஆனால் பாலிவுட் நடிகையும் பிரபல மாடலுமான ஷெனாஸ் ட்ரெஷரி, தனது பயண ஆசைக்காக தொழிலை விட்டு வெளியேறி, தற்போது ஊர் சுற்றிப்பார்ப்பதையே முழு நேர தொழிலாக செய்து வருகிறார். தனது பயண அனுபவம், சுற்றுலாத்தளம் பற்றிய போட்டோ மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், சுற்றுலாவிற்காக பணத்தை சேமிப்பது எப்படி என சில அட்வைஸ்களையும் கொடுத்துள்ளார்.

பயணத்தை முழு நேர வேலையாக செய்து வரும் ஷெனாஸ் இதுகுறித்து கூறுகையில், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகை விட்டு விலகி, பயணம் செய்ய திட்டமிட்ட போது சம்பளத்திற்காக என்ன செய்யப்போகிறேன் என தெரியாது. ஆனால் பட்ஜெட் மற்றும் சேமிப்பு எனது கனவுகளை நனவாக்க உதவியது. எனவே அடுத்த முறை நீங்கள் பயணம் செய்ய திட்டமிடும் போது, பணத்தை எப்படி புத்திசாலித்தனமாக செலவழிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

1. பட்ஜெட் ப்ரெண்ட்லி தங்குமிடம்: 

விலையுயர்ந்த 5 நட்சத்திர ஓட்டலில் தங்கினால் தான் விடுமுறையை ஹேப்பியாக கழித்ததாக அர்த்தம் கிடையாது. புதுப்புது இடங்களை பார்ப்பது, புதிய மனிதர்களை சந்திப்பது, அங்குள்ளவர்களின் கலாச்சாரத்தை அறிந்து கொள்வது தான் பயணத்திற்கான மகிழ்ச்சியான அனுபவமாகும். எனவே பயணம் செல்லும் போது உங்கள் பட்ஜெட்டுக்குள் நல்ல நிலையில் உள்ள தங்கும் விடுதிகள் அல்லது ஓட்டல்களை தேர்வு செய்ய வேண்டும்.


2. சம்பளத்தை சேமியுங்கள்: 

வாழ்க்கை ஒரு மாதிரி போர் அடிக்கிறது... எங்காவது சுற்றுலா சென்று வந்தால் நன்றாக இருக்கும்... என யோசிக்கிறீர்களா?. அதற்கு முன்னதாக உங்கள் சம்பளம் அல்லது வருமானத்தில் இருந்து ஒரு மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகையை சேமித்து வைக்க வேன்டுமாம். ஆம், பயண செலவிற்காகவே தனியாக ஒரு கணக்கு தொடங்கி, வருமானத்தில் 10 சதவீதத்தை சேமித்து வைக்க வேண்டும்” என்கிறார் ஷெனாஸ் ட்ரெஷரி.


3. பட்ஜெட்டை பாலோ பண்ணுங்க: 

கஷ்டப்பட்ட சேர்த்துவைத்த பணத்தை செலவழிக்கும் முன்பு பட்ஜெட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், அதில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்றும் ஷெனாஸ் ட்ரெஷரி தெரிவிக்கிறார். “சுற்றுலா கிளம்பும் முன்பே மொத்த செலவையும் கணக்கிட்டு, பட்ஜெட்டை தயார் செய்து கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையும் ஈவு, இரக்கம் காட்டாமல் பட்ஜெட்டை ஸ்ட்ரிக்டாக பாலோ செய்ய வேண்டும்” என்கிறார்.

4. செலலவு கண்காணிப்பு: 

பட்ஜெட்டை உருவாக்கினால் மட்டும் போதாது, செய்யும் ஒவ்வொரு செலவையும் கண்காணிக்க வேண்டும். இதனால் பயணத்தின் போது அதிகமாக செலவு செய்வதை முன்கூட்டியே அறிந்து, தவிர்க்க உதவும். தனிப்பட்ட முறையில் கணக்கு வழக்குகளை செல்போன் ஆப்கள் அல்லது நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்தோ கண்காணிக்கலாம்.

5. சேமிப்பு ஹேக்: 

விமான நிறுவனங்கள், கிரெடிட் கார்டுகள், ஹோட்டல்கள் போன்றவற்றால் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பயண டிக்கெட்கள், ரூம் ஆகியவற்றை ஆன்லைன் அல்லது ஆப்கள் மூலமாக புக் செய்யும் போது கிரெடிட் பாண்ட்களை சேகரிப்பதும் தள்ளுபடிகள் பெற உதவும்.

6. அட்ஜஸ்ட்மெண்ட் அவசியம்: 

எப்போது சுற்றுலா செல்ல விரும்புவோர் சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பட்ஜெட்டிற்குள் சுற்றுலா தளங்களை பார்வையிட விரும்பினால் ஆஃப் சீசன்களைத் தேர்வு செய்யலாம். இது தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து பயண செலவுகளையும் குறைக்க உதவும். அதேபோல் சின்ன சின்ன வசதிகளை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதும் பயணத்தை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றும்.

 Click here to join whatsapp group for daily health tip

உங்கள் வயிற்று வலிக்கு காரணம் என்ன..? அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்!

 மேல் வயிற்றுப் பகுதியில் வலி எடுப்பது அஜீரனம், வாயுத்தொல்லை போன்ற சாதாரண வலி கிடையாது. தீவிரத்தன்மை கொண்ட உடல்நலப் பிரச்சினைகளால் இந்த வலி ஏற்படலாம். குறிப்பாக, ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்னும் அமில எதுக்களித்தல் மற்றும் பித்தப்பை கல் போன்ற காரணங்களால் வயிறு வலி ஏற்படலாம்.

இந்த இரண்டு பிரச்சினைகளுக்குமான அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால் பெரும்பாலும் மக்கள் குழப்பம் அடைந்து விடுவார்கள். ஆகவே, இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை புரிந்து கொண்டால், அதற்கேற்ப நாம் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். மேலும், வாழ்வியல் பழக்க, வழக்கங்களை மாற்றி கொள்ள முடியும்.

ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்றால் என்ன..?

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகுவதற்காக குடலில் அமிலம் சுரக்கும். இந்த அமிலமானது நமது உணவுக் குழாயை நோக்கி வராமல் இருக்க ஸ்பின்ஸ்டர் என்னும் வால்வு இருக்கும். இது தளர்வடையும் பட்சத்தில் அமிலமானது உணவுக் குழாயை நோக்கி மேலெழும்பி வரும். அதைத்தான் ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்று சொல்கிறோம். இதுவே அடிக்கடி ஏற்படுமாயின், அதை ஜெர்டு என்று குறிப்பிடுகின்றனர்.

பித்தப்பை கல் என்றால் என்ன..?

நமது வயிற்றின் வலது புறத்தில் இருக்கக் கூடிய சிறிய உறுப்புதான் பித்தப்பை. கல்லீரலுக்கும் கீழே இருக்கிறது. செரிமானத்திற்கு தேவையான பைல் என்னும் திரவம் இதில் சுரந்து அங்கிருந்து சிறுகுடலுக்கு வரும். அந்த செரிமான திரவமானது படிந்து நாள்பட ஒரு கல் போல உருவாகிவிடும். பெரும்பாலும் ஆரம்ப காலத்தில் இது எந்தவித அறிகுறிகளையும் காட்டாது. பெரிய அளவுக்கு தொந்தரவு ஏற்படாது. ஆனால், பிரச்சினை தீவிரமாகும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற வேண்டியிருக்கும்.

ஆசிட் ரிஃப்ளெக்ஸ் மற்றும் பித்தப்பை கல் இடையே உள்ள ஒற்றுமை

இந்த இரண்டும் வெவ்வேறான நோய்கள் என்றாலும் அறிகுறிகள் ஒன்றுபோல இருக்கின்றன. சாதாரணமாக இந்த அறிகுறிகளின் வேறுபாடு என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் தவறான சிகிச்சையை நீங்கள் எடுத்துக் கொள்ள நேரிடும். இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.

எங்கு வலி ஏற்படும்..?

ஆசிட் ரிஃப்ளெக்ஸ் பிரச்சினை இருப்பவர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். வயிறு முதல் நெஞ்சு வரையில் எரிச்சல் உண்டாகும். உணவுக் குழாயின் அடிப்பகுதியான ஸ்பின்ஸ்டர் வால்வு தளர்வதன் காரணமாக கீழ் பகுதி நெஞ்சு எலும்புகளை ஒட்டி வலி அதிகமாக இருக்கும்.

இதேபோல பித்தப்பை கல் பிரச்சினைக்கும் மேல் வயிற்றில் வலி ஏற்படும் என்றாலும், அது வலது புறமாக இருக்கும். நெஞ்சு அல்லது இடுப்பு பகுதி வரையிலும் வலி பரவும்.

வலி எப்படி இருக்கும்..?

குனிவது, வளைவது போன்ற சமயங்களில் ஆசிட் ரிஃப்ளெக்ஸ் காரணமாக வரும் வலி அதிகமாகும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஆண்டசிட் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், பித்தப்பை கல் பிரச்சனையால் ஏற்படும் வலி என்பது நீங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளீர்களோ, அந்த அளவுக்கு தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும்.

நேர கணக்கீடு முக்கியம்

ஆசிட் ரிஃப்ளெக்ஸ் காரணமாக ஏற்படும் வலி என்பது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரையில் நீடிக்கலாம். கொழுப்பு நிறைந்த உணவு சாப்பிடும்போதும், வயிறு முட்ட சாப்பிடும்போதும் வலி உண்டாகும். பித்தப்பை கல் வலியும் சாப்பிட்ட பிறகு ஏற்படும் என்றாலும், அது உடனடியாக தோன்றுவதில்லை. ஆனால் 5 மணி நேரம் வரையிலும் கூட நீடிக்கும்.

வயிற்று வலிக்கு வேறு காரணம்

பித்தப்பை கல் இருப்பவர்களுக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலமாக அது உறுதி செய்யப்பட்டாலும், அவர்களுடைய வயிற்று வலிக்கு ஆசிட் ரிஃப்ளெக்ஸ் காரணமாக இருக்கலாம். இதனால் தான் சிலருக்கு பித்தப்பை கல் அகற்றிய பிறகும் கூட வயிற்று வலி நீடிக்கிறது. அதேசமயம், ஆரோக்கியமான உணவு முறையை கடைப்பிடிப்பதன் மூலமாக இந்த இரண்டையுமே தவிர்க்க முடியும்.

 Click here to join whatsapp group for daily health tip

முளைகட்டிய பயறுகளை பச்சையாக உண்பதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள்..!

 குறைவான கலோரி, அதிக ஃபைபர் சத்து, வலுவான புரோட்டின் சத்து, வைட்டமின் சி, ஃபோலேட், காப்பர் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ஸ்னாக்ஸாக முளைகட்டிய பயறுகள் குறிப்பிடப்படுகின்றன.

ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதன் காரணமாக முளைகட்டிய பயறு வகைகள் சூப்பர் ஃபுட்ஸ் என்று குறிப்பிடப்படுகிறனன. முளைகட்டிய பயறு வகைகளை பலர் பச்சையாகவும் உட்கொள்கிறார்கள் சிலர் லேசாக வேகவைத்து அல்லது சமைத்தும் உட்கொள்கிறார்கள். பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அப்படியே ரா-வாக முளைகட்டிய பயறுகளை சாப்பிடுவதால் சில நன்மைகளும் கூடவே சில அபாயங்களையும் கொண்டு உள்ளது.

முளைகட்டிய பயறுகள் என்பவை விதை மற்றும் குழந்தை தாவரம் உள்ளிட்ட இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவை. சாலட்ஸ் முதல் சாண்ட்விச் வரை பலவற்றிலும் பச்சையாக முளைகட்டிய பயறுகளை பயன்படுத்தலாம். பல்வேறு வகையான ஸ்ப்ரவுட்ஸ் எனப்படும் முளைகட்டும் பயறுகளில் பல்வேறு வகைகள் உள்ளன. வெஜிடபிள் ஸ்ப்ரவுட்ஸ், பீன் ஸ்ப்ரவுட்ஸ், ஸ்ப்ரவுட்டட் கிரெயின்ஸ், நட்ஸ் & சீட் ஸ்ப்ரவுட்ஸ் என பல உள்ளன.

வெஜிடபிள் ஸ்ப்ரவுட்ஸ் என்னும் போது மஸ்ட்டர்ட் கிரீன், ப்ரோக்கோலி, ரெட் க்ளோவர் மற்றும் அல்ஃப்ல்ஃபா ஸ்ப்ரவுட்ஸ் உள்ளிட்ட பல இருக்கின்றன. பீன் ஸ்ப்ரவுட்ஸ் என்னும் போது கிட்னி பீன்ஸ்,ஸ்னோ பீஸ் மற்றும் பிளாக் பீன் ஸ்ப்ரவுட்ஸ் உள்ளிட்டவை அடங்கும். ஸ்ப்ரவுட்டட் கிரெயின்ஸ் வகையில் குயினோவா மற்றும் வீட்கிராஸ் ஸ்ப்ரவுட்ஸ் அடக்கம். நட்ஸ் & சீட் ஸ்ப்ரவுட்ஸ் என்னும் வகையில் எள் விதைகள், பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதை ஸ்ப்ரவுட்ஸ்கள் வருகின்றன. சரி, இப்போது முளைகட்டிய பயறு அல்லது தானிய வகைகளை பச்சையாக உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகளை பார்க்கலாம்...

நன்மைகள்:

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் :

ரா ஸ்ப்ரவுட்ஸ் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் ரத்த சர்க்கரையை சிறப்பாக கட்டுப்படுத்த உதவும். இது தொடர்பான ஆய்வில் ரா ஸ்ப்ரவுட்ஸ் amylase enzyme செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கலாம். எனவே இது சர்க்கரைகளை சரியாக உடைத்து ஜீரணிக்க உடலை பயன்படுத்த செய்கிறது.

செரிமான மேம்பாடு :

பச்சையாக உட்கொள்ளப்படும் முளைகட்டிய பயறு வகைகள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற மற்றும் செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவ கூடும். பச்சையாக எடுத்து கொள்ளப்படும் ஸ்ப்ரவுட்ஸ்களில் குறைவான ஆன்டி-நியூட்ரியன்ட்ஸ் உள்ளன. இது செரிமான செயல்முறையின் போது தாதுக்களை உறிஞ்சுவதை உடல் திறம்பட செய்ய உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன :

தினசரி உணவில் சமைக்காத முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து கொள்வது நம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மைகளை அளிக்கும். இப்பழக்கம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் என குறிப்பிடப்படும் HDL-ஐ அதிகரிப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது என்பதை பல ஆய்வுகள் எடுத்து காட்டியுள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால் ரா ஸ்ப்ரவுட்ஸ், கெட்ட கொலஸ்ட்ரால், மொத்த கொழுப்பு மற்றும் பிளட் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தீமைகள்:

ரா ஸ்ப்ரவுட்ஸ்களை உண்பதால் ஏற்பட கூடிய முக்கிய அபாயம் ஃபுட் பாய்சனிங் ஆகும். ஏனென்றால் பச்சையாக உட்கொள்ளப்படும் முளைகட்டிய பயறு வகைகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். மேலும் இவை உணவுகளால் பரவும் நோயை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். விதைகள் ஈரப்பதமான நிலையில் முளைப்பதால் பாக்டீரியாக்கள் மட்டுமின்றி கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும் வாய்ப்புகளும் அதிகம்.

எனவே பயறுகளை முளைகட்டிய பின் அப்படியே சாப்பிடாமல் நன்கு வேகவைத்து சாப்பிடுவது நோய்வாய்ப்படாமல் பாதுகாக்க உதவலாம். பல ஆய்வுகளின்படி பெரும்பாலான ஆரோக்கியமான மக்களுக்கு, பச்சையாக அல்லது லேசாக சமைத்த வேக வைத்த ஸ்ப்ரவுட்ஸ்களை சாப்பிடுவதால் நன்மைகள் கிடைப்பதை விட, அபாயங்கள் சற்று அதிகம் இருக்கும். காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு அபாயங்களும் உண்டு. ஸ்ப்ரவுட்ஸ் தவறான முறையில் வளர்க்கப்பட்டால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொண்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 Click here to join whatsapp group for daily health tip

காலையில் எழுந்துகொள்ளும் போது சோர்வாகவே இருக்கிறதா..? இவையெல்லாம் காரணங்களாக இருக்கலாம்...

 காலையில் எழுந்து கொள்ளும் போது உற்சாகமாகவும், மனம் லேசாகவும் இருந்தால் அந்த நாள் சிறப்பாக இருக்கும். ஆனால் பலருக்கும் சரியான தூக்கமின்மை, போன்ற சில காரணங்களால் காலையில் எழுந்து கொள்ளும் போது சோர்வாக இருக்கும். சோர்வை போக்குவதற்கு சுட சுட டீயோ காபியோ குடித்து அன்றைய நாளை தொடங்குவார்கள். நீங்கள் தினமும் 8 மணி நேரம் நன்றாகத் தூங்கியும், அதற்கு பிறகும் காலையில் சோர்வாக இருந்தால், தொடர்ச்சியாக உங்களுக்கு காலையில் எழுந்து கொள்ளும் பொழுது நீங்கள் சோர்வாகவே உணர்ந்தால் உங்களுடைய பழக்க வழக்கங்களில் பின்வருவனற்றை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

அலாரம் அடிக்க அடிக்க ஆஃப் செய்வது :இன்னும் ஒரு 5 நிமிடம் தூங்கலாம், இன்னும் ஒரு 10 நிமிடம் தூங்கலாம் என்று அலாரம் அடிப்பதற்கு முன்பாகவே அல்லது அடிக்கும் பொழுது உடனடியாக அது ஸ்னூஸ் மோடுக்கு மாற்றுவது, காலை நேரத்தில் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் நன்றாக தூங்கி தூங்கி கொண்டிருக்கும் பொழுது அலாரம் அடித்து இடையில் விழித்து மீண்டும் சில நிமிடங்கள் தூங்குவது என்பது வழக்கத்தை விட உங்களை அதிகமாக சோர்வாக்கும். உங்களுடைய ஆழமான தூக்கத்தில் இருந்து நீங்கள் கண்விழித்து விட்டீர்கள், எனவே, மீண்டும் அந்த நிலைக்கு செல்ல முடியாது.

அதிகமாக காஃபி மற்றும் காஃபீன் உள்ள பானங்கள், மதுபானம் :பலருக்கும் காலையில் எழுந்த உடனேயே சுடச்சுட காபி இருக்க வேண்டும்; அந்த அளவுக்கு மிகப்பெரிய ஆற்றலை கொடுக்கும் காபியில் இருக்கும் காஃபீன் உங்களுடைய நரம்பு மண்டலத்தை தூண்டி விட்டு உங்களை உற்சாகப்படுத்தும். ஆனால் நீங்கள் தூங்குவதற்கு முன்பு காபி குடித்தால் அது உங்களை உற்சாகமாக வைத்திருக்கும், ஆனால் உங்கள் தூக்கம் கெடும். எனவே காலையில் எழுந்து கொள்ளும் போது சோர்வாக இருந்தால் காபி குடிப்பதை குறைக்க வேண்டும். அதேபோல மதுபானத்தையும் தவிர்க்க வேண்டும். காபி மற்றும் மதுமானம் இரண்டுமே ஆழமான தூக்கத்தை பாதிக்கிறது. இதனால் நீங்கள் காலையில் சோர்வாகத்தான் எழுந்து கொள்வீர்கள்.

உங்கள் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளை, தூக்கத்தின் தேவையை புரிந்து கொள்ளுங்கள் :ஆங்கிலத்தில் இதை Chronotype என்று கூறுவார்கள். ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்க வேண்டும் என்று இயற்கையாகவே தோன்றிவிடும். அந்த நேரத்தில் நீங்கள் கட்டாயமாக தூங்க வேண்டும். எளிதாக சொல்ல வேண்டுமானால் ஒரு சிலருக்கு இரவு முழுவதும் வேலை செய்து நள்ளிரவுக்கு பின்பு அல்லது அதிகாலை நேரத்தில் தூங்க செல்வார்கள். ஒரு சிலர் காலையில் எழுந்து இரவில் சீக்கிரமாக தூங்கி விடுவார்கள். இவ்வாறு உங்களுடைய உடலுக்கு எந்த நேரத்தில் தூங்கினால் அது சரியாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல நீங்கள் உங்களுடைய தூக்க நேரத்தை நீங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.

நிம்மதியான தூக்கத்தை பாதிக்கும் சுற்றுபுறம் மற்றும் காரணிகள் :பொதுவாகவே ஒரு சிலருக்கு தூங்கும் போது, தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்றே தெரியாது. தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள மாட்டார்கள். இடி இடித்தாலும், பூகம்பமே வந்தாலும் தூக்கம் கெடாது என்று என்ற நிலையெல்லாம் ஒரு வகையில் வரம் தான். ஆனால் ஒரு சிலருக்கு விளக்கு போட்டால், சிறிய சத்தம் கேட்டாலே, தூக்கம் கலைந்துவிடும். எனவே அவ்வாறு மிகவும் சென்சிட்டிவாக இருப்பவர்கள் அமைதியான இடமாக தேர்வு செய்ய வேண்டும். விளக்கின் வெளிச்சம், மொபைலில் இருந்து, எலெக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வெளிவரும் நீல ஒளி, ஆகியவை கூட சில நேரங்களில் உங்கள் தூக்கத்தை கெடுக்கும். அதேபோல நீங்கள் படுக்கும் மெத்தை, பயன்படுத்தும் தலையணை, ஆகியவை சவுகரியமாக இருக்கிறதா என்பதை நீங்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும்.

உங்களுடன் தூங்குபவரால் உங்களுக்குத் தொந்தரவு :உங்கள் சகோதரன், சகோதரி, பெற்றோர்கள் அல்லது திருமணமானவர்களாக இருந்தால், கணவன்/மனைவி என்று உங்களுடன் தூங்குபவர்களால் உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். அவர்கள் தூங்காமல் உங்களிடம் பேசிக் கொண்டே தொந்தரவு செய்யலாம். அல்லது, அவர்களுடைய குறட்டையால் கூட உங்கள் தூக்கம் கெடலாம். எனவே அவர்கள் நன்றாக தூங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு அதை செய்யுங்கள், நீங்கள் நிம்மதியாக தூங்கி காலையில் பிரஷ்ஷாக எழுந்து கொள்ள முடியும்.

தூக்கம் சார்ந்த குறைபாடுகள் :மேலே குறிப்பிட்ட எந்த விதமான காரணமும் இல்லை என்றாலும், காலையில் உங்களால் உற்சாகமாக எழுந்து கொள்ள முடியவில்லை என்றால், உங்களுக்கு தூக்கம் சார்ந்த ஏதேனும் குறைபாடு இருக்கலாம். மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.


 Click here to join whatsapp group for daily health tip

பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் 6 ஊட்டச்சத்து குறைபாடுகள் : இதை மட்டும் கவனிச்சுக்கோங்க...

 ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தற்போதும் தொடர்ந்து வருவது கவலைக்குரியதாக இருக்கிறது. ஏனென்றால் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் சில நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும்.

ஒப்பீட்டளவில் சில ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கலாம். சோர்வு, தலைசுற்றல், விரல்களில் கூச்சம், தசை பலவீனம் மற்றும் எலும்பு வலி வரை பல கோளாறுகள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும். எனவே தங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகளை பெண்கள் அறிந்து கொள்வது அவசியம்.

இந்திய பெண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள் இங்கே...

கால்சியம் குறைபாடு :

பற்கள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. அது போல நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கால்சியம் அவசியம். எலும்புகளின் வலிமைக்கும் இது மிகவும் முக்கியமானது. கால்சியம் குறைபாடு காரணமாக பலவீனமான எலும்பு, பற்களில் பிரச்சனை, தசைப்பிடிப்புகள், சீரற்ற இதயத் துடிப்பு உள்ளிட்டவை ஏற்படலாம். பால் மற்றும் பால் பொருட்களை தவிர சோயா பால், டோஃபு, ப்ரோக்கோலி, பீன்ஸ், பாதாம், எள், சியா விதைகள், உலர்ந்த அத்திப்பழங்கள் மற்றும் கடுகு கீரை உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்ப்பதன் மூலம் கால்சியம் குறைபாட்டை சரி செய்யலாம்.

வைட்டமின் டி பற்றாக்குறை :

உடலின் வழக்கமான மற்றும் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு வைட்டமின் டி மிக அவசியம். நல்ல எலும்பு தாது அடர்த்தியை பராமரிக்க தேவையான கால்சியம் உறிஞ்சுதலுக்கு வைட்டமின் டி3 பொறுப்பாகும். இதன் மூலம் எலும்பு முறிவுகளின் அபாயம் குறையும். குறிப்பாக சூரிய ஒளியில் இருந்து பெறக்கூடிய ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாக இருக்கிறது. இதில் ஏற்படும் பற்றாக்குறை முதுகுவலி, முடி உதிர்வு, அதீத சோர்வு உள்ளிட்ட பல அறிகுறிகளை ஏற்படுத்தும். மீன் மற்றும் மீன் எண்ணெய் சப்ளிமெண்ட், சீஸ், போர்ட்ஃபிட்டட் மில்க், முட்டையின் மஞ்சள் கரு உள்ளிட்டவை வைட்டமின் டி-யின் வலுவான ஆதாரங்கள்.

அயோடின் குறைபாடு :

இயல்பான தைராய்டு செயல்பாடு மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு அயோடின் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். உடலில் போதுமான அயோடின் இல்லாவிட்டால் உடல் வளர்சிதை மாற்றம், உடல் வெப்பநிலை மற்றும் பலவற்றைக் கட்டுப்படுத்த உதவுவதற்கு போதுமான தைராய்டு ஹார்மோன்கள் உருவாகாது. எடை அதிகரிப்பு, பலவீனம், சோர்வு, முடி உதிர்வு உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். பால், உப்பு, முட்டை, கோழி, கடற்பாசி உள்ளிட்டவை அயோடின் நிறைந்தவை.

வைட்டமின் பி12 பற்றாக்குறை :

இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் மேலும் இதை நம் உடலால் இயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது, உணவுகளில் இருந்து தான் பெற வேண்டும். இந்த வைட்டமின் மூளை மற்றும் நரம்பு செல்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் டிஎன்ஏ உற்பத்தியை எளிதாக்குகிறது. ரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதற்கும், ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், நரம்பியல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் இது முக்கியமானது. B12 விலங்கு உணவுகளில் போதுமான அளவு காணப்படுகிறது. பால், முட்டை, தயிர், கொழுப்பு நிறைந்த மீன்கள், சிவப்பு இறைச்சி, செறிவூட்டப்பட்ட தானியங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் வைட்டமின் பி 12 பெறலாம்.

ஃபோலேட் குறைபாடு :

இது வைட்டமின் பி-9 அல்லது ஃபோலிக் ஆசிட் என்றும் குறிப்பிடப்படுகிறது. தீவிர சோர்வு, ஆற்றல் பற்றாக்குறை, மூச்சுத் திணறல், தலைவலி, பார்வையில் தொந்தரவு, வாய் புண்கள், தசை பலவீனம், மனச்சோர்வு மற்றும் அதிக குழப்பம் உள்ளிட்ட பல அறிகுறிகள் இந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும். ஃபோலேட் உடலில் சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கிய செல் வளர்ச்சி ஊக்குவிக்கிறது. பெண்களுக்கு காணப்படும் ஃபோலேட் குறைபாடு கர்ப்ப காலத்தில் பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தை ஏற்படுத்த கூடும். குழந்தை பெற்று கொள்ள திட்டமிடும் பெண்கள் கருத்தரிப்பதற்கு முன், ஃபோலேட் அளவு அதிகமாக இருப்பதை உறுதிசெய்ய தகுந்த வைட்டமின்களை உட்கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அடர்ந்த இலை கீரைகள், பீன்ஸ், பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ் & சீட்ஸ்களில் ஃபோலேட் காணப்படுகிறது.

இரும்புச்சத்து குறைபாடு :

போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் ஏற்படும் குறைபாடுகளின் பட்டியலில் ரத்த சோகை முக்கியமனது. ரத்த சோகைக்கு மிகவும் பொதுவான காரணமாக இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களில் காணப்படும் ரத்த சோகையானது கர்ப்பம் அல்லது பிரசவத்தின் போது பெண்களின் மரண அபாயத்தை அதிகரிக்கிறது. மாதவிடாய் காரணமாக ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, ரத்த சோகைக்கு முக்கிய காரணமாகிறது. இந்த இழப்பை ஈடுசெய்யாமல் போவதால் பெண்களில் இரும்புச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. இழக்கும் இரும்புச்சத்தை மீட்டெடுக்க கடல் உணவுகள், சிவப்பு இறைச்சி, பீன்ஸ், கீரைகள், உலர் திராட்சை, பாதாமி போன்றவற்றை பெண்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.

 Click here to join whatsapp group for daily health tip

மிளகு முதல் இஞ்சி வரை... நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த கிட்சனில் இருக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

 

இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ள சர்க்கரை நோய். என்னதான் இதற்கு இன்சுலின் முதல் பல்வேறு மருந்து மாத்திரைகள் நாம் சாப்பிட்டாலும் பயனில்லை.

இன்றைக்கு மாறிவரும் உணவுப்பழக்கங்கள் நம்முடைய உடல் நலத்தையும் முற்றிலும் பாதித்துவிட்டது. குறிப்பாக இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ள சர்க்கரை நோய். என்னதான் இதற்கு இன்சுலின் முதல் பல்வேறு மருந்து மாத்திரைகள் நாம் சாப்பிட்டாலும் பயனில்லை. நம்முடைய உணவுமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும், இல்லாவிடில் பல எண்ணற்ற நோய்களையும் நாம் பெறக்கூடும். எனவே இந்நேரத்தில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஆயுர்வேத மூலிகைள் என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

மிளகு: எந்த விஷமுள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும் சிறிதளவு மிளகு சாப்பிடுங்கள் போதும். விஷத்தை முறித்துவிடும் என்பார்கள் நம்முடைய முன்னோர்கள். ஆம் அந்தளவிற்கு மிளகில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. குறிப்பிட்ட உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவியாக உள்ளது.

நாவல் பழம்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த பழம் என்றால் அது நாவல் பழம் தான். இப்பழங்களில் உள்ள துவர்ப்பு தன்மையும், ஜம்போலினின் என்ற குளுக்கோசைடு உடலில் ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டை தடுக்க கூடியது. எனவே சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கு தினமும் 4-5 நாவல் பழங்கள் அல்லது இலைகளை மென்று சாப்பிடலாம். இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

இஞ்சி: இஞ்சியில் வைட்டமின்கள் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம்,பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதில் உள்ள ஹைப்போலிபிடெமிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நீரழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்திருக்க உதவுகிறது. எனவே நீரழிவு நோயாளிகள் காலையில் எழுந்தவுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவையும் குறைக்க முடியும்.

நெல்லிக்காய்: சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகளில் முக்கியமானது நெல்லிக்காய். இதில் உள்ள வைட்டமின் சி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக உள்ளது. இதோடு இதில் உள்ள நார்ச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தில் உள்ள குளுக்கோஸை மெதுவாக வெளியிடும் வேலை செய்கின்றது. எனவே நீரழிவு நோயாளிகள், நெல்லிக்காயை ஜூஸாகவோ அல்லது அப்படியே ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடும் போது சர்க்கரை அளவைக் குறைத்துக் கொள்ள முடியும்.

வெந்தயம்: நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த ஆயுர்வேத மருந்தாக உள்ளது வெந்தயம். முளைகட்டிய வெந்தயத்தைத் தினமும் நீங்கள் சாப்பிடும் போது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கிறது. இது டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம். இதோடு உடல் பருமனைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

ஜின் செக் (Ginseg): அமுக்கரா, தண்ணீர் விட்டான் போன்ற கிழங்கு வகையைச் சார்ந்தது தான் ஜின்செக். இது வெளிநாடுகளில் அதிகளவில் கிடைக்கிறது. இதில் உள்ள நோயெதிர்ப்பு பண்புகள் இரத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் அதிகளவில் உள்ளதால் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே சரக்ரை நோய் உள்ளவர்கள் தினமும் அரை டீஸ்பூன் பட்டை பொடியை உணவில் சேர்க்க வேண்டும். இது சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, உடல் எடை கட்டுப்பாடுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதய நோய்க்கான அபாயத்தையும் குறைக்கிறது.


இந்த ஆயுர்வேத மூலிகைப் பொருள்களைப் போன்று பாகற்காய் ஜுஸ், கடலைப்பருப்பு, வேப்பிலை, ஆவாரம் பூ, கிரீன் டீ, ஆளி விதை போன்ற பொருள்களையும் சர்க்கரை நோயாளிகள் தினமும் உங்களுடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் சர்க்கரை அளவை நிர்வகிக்க முடியும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.


 Click here to join whatsapp group for daily health tip