Madurai Railway Division jobs: ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் (ATVMs) மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வழங்கும் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகமதுரைரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
காலியிட விவரங்கள் பின்வருமாறு:-
1. மதுரை ரயில் நிலையம் - 6
2. திண்டுக்கல் ரயில் நிலையம் -5
3. மணப்பாறை ரயில் நிலையம் -2
4. மானாமதுரை ரயில் நிலையம் -2
5. பரமக்குடி ரயில் நிலையம்-1
7.புனலூர் ரயில் நிலையம் -1
8.கொட்டாரக்கரா ரயில் நிலையம் -1
9.திருநெல்வேலி ரயில் நிலையம் -5
10.நாசரேத் ரயில் நிலையம் -1
11.திருச்செந்தூர் ரயில் நிலையம் -1
12.விருதுநகர் ரயில் நிலையம் -2
13.கோவில்பட்டி ரயில் நிலையம் -2
14.சாத்தூர் ரயில் நிலையம் -2
15.சிவகாசி ரயில் நிலையம்-2
16.சங்கரன்கோவில் ரயில் நிலையம் -1
17.புதுக்கோட்டை ரயில் நிலையம் -1
18.உடுமலைப்பேட்டை ரயில் நிலையம் -1
19.பழனி ரயில் நிலையம்-1
20.கடையநல்லூர் ரயில் நிலையம் -1
21.கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் -1
22.செங்கோட்டை ரயில் நிலையம்-3
23.சேரன்மகாதேவி ரயில் நிலையம் -1
24.கீழ புலியூர் ரயில் நிலையம் -1
25.அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் -1
26.பாவூர் சத்திரம் ரயில் நிலையம்-1
27.தூத்துக்குடி ரயில் நிலையம் -1
28. வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் -2
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதாகும். மாதிரி விண்ணப்பப் படிவம் மற்றும் பொதுவான நிபந்தனைகள் மேற்கண்ட ரயில் நிலையங்களின் அறிவிப்புப் பலகைகளில் உள்ளது. குறிப்பிட்ட ரயில் நிலையத்தின் அருகில் குடியிருக்கும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டுமே , அந்தந்த ரயில் நிலையத்தில் உள்ள பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் (குரூப் சி மற்றும் டி பணியாளர்கள்) இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை Sr.Divisional Commercial Manager. Southern Railway DRM Office Madurai-625016 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என மதுரை ரயில்வே கோட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது.... உடலை குளிர்ச்சியாக வைக்க தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால், உடல் அதிக உஷ்ணமானால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். மனித உடலின் சராசரி வெப்பநிலை 97.8°F முதல் 99.0°F இருத்தல் வேண்டும். உடல் உஷ்ணத்திற்கு காலநிலை மாற்றம், உணவு பொருட்கள் என பல காரணங்கள் உள்ளது. நமது உடல் சூட்டை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம். அந்தவகையில், உடல் உஷ்ணத்தை இயற்கையாக கட்டுப்படுத்தும் சில உணவுப்பொருட்கள் பற்றி காணலாம்.
உடல் சூட்டை கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய உணவு பொருளாக இளநீர் உள்ளது. மேலும், கோடை காலத்தின் போது ஏற்படும் சருமம் தொடர்பான ஒவ்வாமை பிரச்சனைகளை எதிர்கொள்ள இளநீர் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. எனவே, கோடைக்காலத்தில் தினமும் குறைந்தபட்சம் ஒரு இளநீராவது குடிக்க வேண்டியது அவசியம்.
வெள்ளரிக்காய் ஒரு கோடை கால உணவு பொருள். வெள்ளரிக்காயினை அப்படியே சாப்பிடுவது (அல்லது) வட்ட வடிவில் வெட்டி கண் இமைகளுக்கு மேல் வைத்து ஓய்வு எடுப்பது, உடல் சூட்டை குறைக்க உதவும். அதுமட்டும் அல்ல, உடல் எடை குறைப்புக்கு வெள்ளரிக்காய் சிறந்த உணவாக உள்ளது.
புதினாவை சட்னி, சாறு, சாதம் என ஏதேனும் ஒரு வடிவில் தினமும் நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை குறைக்க உதவும். மேலும், புதினாவில் உள்ள மருத்து குணங்கள் வயிற்றுப்புண், குடல் புண்களையும் குணப்படுத்தும்.
தர்பூசணி பழம் சுமார் 91.45% தண்ணீரால் ஆனது. கோடைக்கு ஏற்ற இந்த பழத்தினை அவ்வப்போது சாப்பிடுவது உடல் சூட்டை கடுப்படுத்தி கோடை நோய்களில் இருந்து காக்கும். இது உடலை குளிச்சியாக்குவதுடன், சரும பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
தயிரை நேரடியாக எடுத்துக்கொள்ளும் போது அது உடல் சூட்டை அதிகரிக்கும். எனினும் லஸ்ஸி, ராய்த்தா மற்றும் மோர் என பல குளிர் பான வகையாக தயிரை எடுத்துக்கொள்வது உடல் சூட்டை குறைக்க உதவும். அதுமட்டும் அல்ல, இது உடலுக்கு தேவையான புரதத்தை கொடுத்து புத்துணர்ச்சியளிக்கும்.
கோடை காலத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கும் ஒரு ஊட்டச்சத்து மிக்க பழமாக வாழைப்பழம் (குறிப்பாக பச்சை வாழைப்பழம்) உள்ளது. மேலும், இந்த வாழைப்பழம் உஷ்ணத்தால் ஏற்படும் மலச்சிக்கலையும் போக்குகிறது. வாழைப்பழத்தில்,வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது அல்சர் அபாயத்தை குறைக்கிறது.
அவகோடா என அழைக்கப்படும் பட்டர் ஃப்ரூட் -யில் மோனொசாட்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. இது உடல் சூட்டை கட்டுப்படுத்த உதவுவதோடு, செரிமான பிரச்சனைகளை போக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும், இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.
சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது, உடலின் குளிர்ச்சித்தன்மைக்கு பெரிதும் உதவுகிறது. எலுமிச்சையை ஏதேனும் ஒரு வடிவில் நம் உணவில் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை குறைக்க உதவும்.
நமது உடலுக்கு தேவையான இன்றியமையாத ஊட்டச்சத்துக்களில் துத்தநாகமும் ஒன்றாகும். ஜிங்க் என அழைக்கப்படும் இது நமது உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை செய்கிறது. ஜிங்க் குறைபாடு ஏற்படும்போது இவை நமது உடலில் பல்வேறு விதமான பிரச்சினைகளை உண்டாக்கக்கூடும். எனவே தினசரி உணவில் துத்தநாகம் நிறைந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வது அவசியமாகும் அந்த வகையில் எந்தெந்த உணவு பொருட்களில் துத்தநாகம் அதிக அளவு உள்ளது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
ஷெல் மீன் : ஷெல் மீன்களில் துத்தநாகம் அதிக அளவு நிறைந்துள்ளது. இதில் உடலுக்கு தேவையான புரத சத்தும் மட்டுமின்றி மற்றும் பல ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.
இறைச்சி : உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் புரதச்சத்தையும் அளிப்பதில் இறைச்சி முக்கியத்துவம் வாய்ந்த உணவுப் பொருளாக இருந்து வருகிறது. முக்கியமாக இதில் துத்தநாகம் அதிக அளவில் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விதைகள் : பப்பாளி விதைகள், எள் விதைகள் ஆகியவற்றின் நமது உடலுக்கு தேவையான துத்தநாகம் அதிக அளவில் நிறைந்துள்ளது மேலும் இதைத் தவிர நார்ச்சத்தும் மேலும் பல தாது பொருட்களும் இவற்றில் நிறைந்துள்ளன. நமது தினசரி உணவிலோ அல்லது நொறுக்கு தீனியாகவோ இவற்றை நாம் உட்கொள்ளலாம்.
வேர்கடலைகள் : வேர்க்கடலை என அழைக்கப்படும் இந்த நிலக்கடலைகளில் நமது உடலுக்கு தேவையான துத்தநாகம் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இவை குழந்தைகளுக்கும் அதிகம் பிடித்த ஒரு நொறுக்கு தீனியாக இருப்பதால் விதவிதமான முறைகளில் நாம் இவற்றை தயார் செய்து அவர்களுக்கு கொடுக்கலாம்.
பருப்பு வகைகள் : சுண்டல், பீன்ஸ் மற்றும் பல பருப்பு வகைகளில் நமது உடலுக்கு தினசரி தேவைப்படும் அளவில் பத்து சதவீதத்திற்கும் அதிகமான துத்தநாகம் நிறைந்துள்ளது. எனவே முடிந்த அளவு நமது உணவில் இந்த பருப்பு வகைகளையும் சுண்டல் பீன்ஸ் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.
முட்டைகள் : முட்டைகளில் துத்தநாகம் மட்டுமின்றி புரதம் வைட்டமின்கள் என பல்வேறு விதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு முட்டை ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. மேலும் முட்டைகளை நாம் விதவிதமான முறைகளில் சமைத்து உண்ணலாம் என்பதால் இவை குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.
துத்தநாகத்தின் பயன்கள் : நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும் துத்தநாகம் தான் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடலில் உண்டாகும் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்துவதற்கும் துத்தநாகம் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது.
இதைத் தவிர நமது உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் காயத்தை விரைவில் குணமாக்க துத்தநாகம் உதவுகிறது. மேலும் வயதாவதால் ஏற்படும் முதிர்ச்சியான தோற்றத்தை தடுத்து, எப்போதும் இளமையாக காட்சி அளிப்பதற்கு துத்தநாகம் உதவுகிறது.
அடிக்கடி தலைமுடி உதிர்வை பிரச்சனை சந்திக்கும் நபர்களுக்கு உடலில் துத்தநாக குறைபாடு இருக்கும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு துத்தநாகம் முக்கியமானது ஆகும். இதைத் தவிர உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி சீராக வைப்பதற்கு துத்தநாகம் அவசியமாகிறது.
நம்மில் பெரும்பாலோனோருக்கு நமது மனநிலையை பொறுத்து நமது உணவு பழக்க வழக்கமும் மாறுபடும் அந்த வகையில் சமீபத்திய ஆய்வின்படி இந்தியர்களில் 72% மக்கள் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நொறுக்கு தீனிகளை சுவைக்க விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது ஆண் பெண் என இரு பாலினத்தாருக்குமே பொதுவான ஒன்றாக இருந்து வருகிறது.
சமீபத்தில் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய அந்த ஆய்வறிக்கையில், நொறுக்கு தீனிகளை சாப்பிட்ட பிறகு 70% இந்தியர்கள் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வதாக கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த ஆய்வானது இந்தியாவின் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என மொத்தம் பத்து நகரங்களில் உள்ள மக்களில் இடமிருந்து பெறப்பட்டது. அதில் மும்பை, புனே, அகமதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, கொல்கத்தா, சென்னை. ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து தரவுகள் திரட்டப்பட்டுள்ளன.
அதில் 56%மக்கள் தாங்கள் சோகமாக இருக்கும்போது நொறுக்கு தீனிகளை சுவைக்க விரும்புவதாகவும், 40% மக்கள் சலிப்பாக உணரும்போது நொறுக்கு திணிகளை உட்கொள்வதன் மூலம் மனநிலையில் நல்ல மாறுதல்கள் உண்டாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள 81% மக்கள் தங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது நொறுக்கு தீனிகளை உட்கொள்ள விரும்புகிறார்கள். கிடைத்த தரவுகளிலேயே இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தான் நொறுக்கு தீனிகள் உட்கொள்வதில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் 77 சதவீதமும், சென்னையில் 77 சதவீதமும், கொல்கத்தாவில் 75%, மும்பை 28%, அகமதாபாத் 67%, புனே 66%, பெங்களூர் 26% மற்றும் ஜெய்ப்பூரில் 61% மக்கள் நொறுக்கு தீனியை சுவைக்கிறார்கள்.
இதில் டெல்லி, லக்னோ, கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் சோகமாக இருக்கும் போது நொறுக்கு தீனிகளை சுவைக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். இதில் 50% மக்களுடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் தான் கடைசி இடத்தில் உள்ளது.
இவ்வாறு நொறுக்கு தீனிகளை சுவைப்பது என்பது பல்வேறு குடும்பங்களிலும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட இந்திய குடும்பங்களில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் நொறுக்கு தீனிகளை ஒரு மினி மீல்ஸ் ஆக கருதுகின்றனர். அதில் தற்போது அதிக அளவிலான பெற்றோர் நொறுக்கு தீனிகளை ஒருவேளை உணவாகவே உட்கொள்ளும் அளவிற்கு வந்து விட்டனர். 34 சதவீத ஆண்களும், 35 சதவீத பெண்களும் இவ்வாறு ஒரு பழக்கம் அதிகரித்து வருவதை உறுதி செய்துள்ளனர்.
இதைத் தவிர நொறுக்கு தீனிகள் உட்கொள்ளும் பழக்கமானது வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் அவற்றை செய்ய எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. 44 சதவீத இந்தியர்கள் தங்கள் வீடுகளில் வேலைக்கு பணியாளர்கள் இல்லாத போது, நொறுக்கு தீனிகள் அதிகம் உதவுவதாக குறிப்பிட்டுள்ளனர். அதில் 60% பேர் இளம் வயதினராகவும் திருமணமாகாதவராகவும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 2815 நபர்களிடமிருந்து பதில்கள் பெறப்பட்டன. அதில் 25% பேர் வட இந்தியாவில் இருந்தும், 36 சதவீதம் பேர் தென்னிந்தியாவிலிருந்தும், 25% பேர் இந்தியாவின் மேற்கு பகுதியில் இருந்தும், மீதமுள்ளவர் அனைவரும் இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருந்தும் பங்கேற்றுள்ளனர். இதில் 42% பேர் திருமணமாகாதவர் என்றும், 52% பேர் திருமணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது நொறுக்கு தீனிகளை உட்கொள்வது மக்களின் மனநிலையை மகிழ்ச்சியாக உதவுகிறது என்று தெரிய வந்துள்ளது. மேலும் வரும் காலங்களில் இந்த ஆய்வு அறிக்கை அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை குறி வைத்து புதிய நொறுக்கு தீனி வகைகளை சந்தைகளுக்கு கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெயில் காலத்தில நீர் இழப்பு, வயிறு பிரச்சனைகள், பாக்டீரியா தொற்று, வெப்ப பக்கவாதம் போன்ற உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. வெயில் காலத்தில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளா 5 டிப்ஸ் இதோ..
அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் : வெயில்காலத்தில் தண்ணீர் குடிப்பது என்பது உடலுக்கு அவசியமான ஒன்று. ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்
பருவகால பழங்களை சாப்பிடலாம் : அன்னாசிப்பழம்,மாம்பழம், தர்பூசணி, வெள்ளரிக்காய், லிச்சி, எலுமிச்சம் பழம் ஆகியவை வெயிலை சமாளிக்க உதவும் பழங்களாகும். தினசரி உணவில் பழங்களை எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்.
இலகுவான உணவுகளை உண்ணுங்கள்: வெப்பமான காலநிலையில் உங்கள் வயிறு உணவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே, உங்கள் செரிமான பாதை நன்றாக வேலை செய்ய இலகுவான உணவை உண்ணுங்கள்
குளிர்ச்சியான உணவுகளை உண்ணுங்கள்: சம்மர் என்றாலே ஞாபகம் வருவது ஐஸ்கிரீம் தான். இந்த நேரத்தில் உங்கள் உடலுக்கு குளிர்ச்சியான உணவுகள் தேவைப்படுகிறது. எனவே ஐஸ் கிரீம் அல்லது வீட்டிலேயே பழங்களால் செய்யக்கூடிய ஐஸ் பாப்களை (ice pop) சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க.
ஃபிரஷ் ஜூஸ்களை குடிக்கலாம் : வெயில் காலத்தில் பருவகால பழங்களை ஃபிரஷ் ஜூஸாக எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.
நமது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும், அவர்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கவும் கோடை காலம் மிகவும் சிறந்தது. ஏனென்றால், பள்ளிகள் விடுமுறை என்பதால் குழந்தைகள் வீட்டில் அதிக நேரத்தை செலவிடுவார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு நிறைய பொழுதுபோக்கு விஷயங்களை கற்பிக்கலாம். இருப்பினும் கோடை விடுமுறையில், நமது குழந்தைகள் கொளுத்தும் வெயிலில் விளையாட தயாராக இருப்பார்கள். வீட்டுக்குள்ளேயே அருமையான தருணங்களை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளலாம்.
நர்சரியைப் பார்வையிட அழைத்து செல்லலாம் : உங்கள் குழந்தைகளுக்கு தோட்டக்கலை மீதான ஆர்வத்தை வளர்க்க விரும்பினால், அவர்களை அருகில் உள்ள நர்சரிக்கு அழைத்துச் சென்று பல்வேறு வகையான செடிகள் மற்றும் பூக்களை பற்றி கூறலாம். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வைக்க சில பூ செடிகளையும் வாங்கி செல்லலாம். மேலும், உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல உங்கள் நகரத்தில் ஏதேனும் மலர் கண்காட்சி நடைபெறுகிறதா என்று அறிந்து, அவர்களை அழைத்து செல்லுங்கள்.
வாசிப்பு திறனை மேம்படுத்தலாம் : புத்தகம் வாசிப்பதால், மனநலத்தை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தை குறைவதாக ஆய்வுகள் கூறுகிறது. எனவே, குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தலாம். ஆனால், பாடப்புத்தகங்களை வாசிக்க கூற வேண்டாம். ஏனென்றால், என்னடா லீவுல கூட நாம் படிக்கணுமா என நினைத்துவிடுவார்கள். ஆதலால், கதை புத்தகங்கள், விடுகதை போன்ற புத்தகங்களை வாசிக்க கொடுக்கலாம். இல்லையெனில், உங்கள் குழந்தை படிக்க விரும்பும் புத்தகங்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
செல்லப்பிராணி வளர்ப்பு : குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த செயல்பாடுகளில் ஒன்று செல்லப்பிராணி வளர்ப்பு. இது உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியளிக்கும் பொழுதுபோக்காக இருக்கும். இதனால், உங்கள் குழந்தை மிகவும் பொறுப்புள்ளவராகவும், பொறுமையாகவும், இரக்கமுள்ளவராகவும், தன்னம்பிக்கை கொண்டவராகவும் மாற்றும். செல்லப்பிராணிக்கு நகங்களை வெட்டுதல், உணவளித்தல், வாக்கிங் அழைத்து செல்வது போன்ற விஷயங்களை உங்கள் குழந்தைகளை செய்ய சொல்லுங்கள்.
கழிவுகளை மறுசுழற்சி செய்ய கற்றுக்கொடுப்பது : தேவையற்ற கழிவுகளை மறுசுழற்சி செய்வது சுற்றுச்சூழல் நட்பு நடைமுறையாக கருதப்படுகிறது. காகிதம், அட்டை, பிளாஸ்டிக், ஸ்டீல் கேன்கள் போன்ற கழிவுப்பொருட்களை புதியதாக மாற்ற உதவுகிறது. நீண்ட நாள் ஆன தகர டப்பாக்களை பெயிண்ட் செய்து அதில் செடி வைக்க கற்றுக்கொடுக்கலாம். வீட்டிலேயே மறுசுழற்சி செய்வதன் மூலம் உங்கள் பிள்ளையை ஒரு பொழுதுபோக்காக மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கலாம்.
பாட்டு பாடுதல் : பாடுவது ஒரு ஆர்வம் மற்றும் திறன் சார்ந்த பொழுதுபோக்காகும், இது மனதை தளர்த்த உதவுகிறது மற்றும் மேம்பட்ட சுவாசம் மற்றும் இதய செயல்பாடு போன்ற பல உடலியல் நன்மைகளை வழங்குகிறது. ஒரு பாட்டு வகுப்பில் சேர்வது உங்கள் குழந்தையின் திறமையை அதிகரிக்க உதவுவதோடு, அவர்களின் பாடும் திறனை மேம்படுத்தவும் உதவும்.
நடனம் : நடனம் மிகவும் பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்யமான ஒன்று. இது மனதை நிதானப்படுத்தவும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. உங்கள் குழந்தை நடனமாட ஆர்வமாக இருந்தால், அவர்களை ஒரு நடன வகுப்பில் சேர்ப்பது நல்லது. ஒரு தொழில்முறை உதவியாளரிடமிருந்து நடனத்தைக் கற்றுக்கொள்வது, நடனத் திறன்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு உதவும்.
சமைக்க கற்பித்தல் : சமைப்பது நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. ஏனென்றால், சமைப்பது மிகவும் மகிழ்ச்சியான திறமையாகும். அதனால் தான் அனைவரையும் சமையல் எளிமையாக ஈர்க்கிறது. உங்கள் குழந்தைகளுக்கு சமைப்பதில் ஆர்வம் இருந்தால், அவர்களுக்கு சமைக்க கற்றுக்கொடுக்கலாம். இல்லையெனில், உங்களுக்கு உதவ கூறலாம். அவர்களை எக்காரணம் கொண்டும் திட்டாதீர்கள்... பொறுமை முக்கியம். தீயில்லாமல் சமைக்க கற்றுக்கொள்ளுங்கள்.
தைப்பது அல்லது பின்னல் : கை அல்லது இயந்திரம் மூலம் நூல் அல்லது துணி வைத்து கைவினை பொருட்களை தயாரிக்க கற்றுக்கொடுக்கலாம். இதனால், கைவினைப்பொருளின் மீதான இவர்களின் ஆர்வம் அதிகரிக்கும். பின்னல் வகுப்புகள் லேஸ்கள் போன்ற மென்மையான பின்னல் பொருட்களை உருவாக்க சிக்கலான பின்னல் முறைகளைக் கற்றுக்கொள்ள உதவும். இல்லையெனில், சிறப்பு வகுப்புகளுக்கும் அனுப்பலாம்.
நாணயங்களை சேகரித்தல் : தற்போதையை குழந்தைகள் பலரின் ஆர்வமாக காயின் சேகரிப்பு இருந்து வருகிறது. இது குழந்தைகளுக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும், கல்வி சம்மந்தமான பொழுதுபோக்காகவும் இருக்கும். நாணயங்களை சேகரிப்பது, அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கிறது. தனித்துவமான மற்றும் அரிய நாணயங்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் இந்த பொழுதுபோக்கில் நீங்களும் ஈடுபடலாம்.
புகைப்படம் எடுத்தல் : போட்டோகிராஃபி தற்போது அனைவருக்கும் பிடித்த பொழுதுபோக்காக இருக்கும். ஏனென்றால், தொலைபேசி வைத்திருக்கும் அனைவரும் புகைப்படக்கலைஞர்களாக மாறிவிட்டார்கள். அவர்களுக்குத் தேவையானது கேமரா, வழிகாட்டுதல் மற்றும் நல்ல படங்களை எடுப்பதற்கான உதவிக்குறிப்புகளை வழங்குங்கள். பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு உங்கள் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள், படங்களைக் கிளிக் செய்து ஜாலியாக இருங்கள்.
கடும் குளிர் நீங்கள் படிப்படியாக கோடை காலம் வந்து விட்டது. பொதுவாக கோடைகாலம் அவுட்டோர் ஆக்டிவிட்டீஸ்களுக்கு ஏற்றது என்றாலும் இந்த சீசன் பலரின் தூக்க சுழற்சியில் சில இடையூறுகளை ஏற்படுத்துகிறது.
ஆம், வானிலை மாற்றம், அதிக வெப்பம் மற்றும் வியர்வை தவிர சிலருக்கு தூங்குவது இந்த சீசனில் சவாலாக இருக்கும். இரவு சரியாக தூங்காவிட்டால் அது பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். கோடை காரணமாக உங்களுக்கும் இரவு நேர தூக்கம் என்பது சவாலாக இருப்பின், கீழ்காணும் இந்த எளிய ட்ரிக்ஸ்கள் மூலம் நல்ல தூக்கத்தை பெற முயற்சிக்கவும்.
உங்கள் பெட்ரூமை கூலாக வைத்திருங்கள் : உங்கள் பெட்ரூமின் வெப்பநிலையானது உங்கள் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் பெட்ரூமின் வெப்பநிலை 60-67°F இடையே இருக்க வேண்டும். கோடை காலத்தில் உங்கள் பெட்ரூம் அதிக சூடாவதை தவிர்க்க பகலில் உங்கள் பெட்ரூம் ஜன்னல்கள் மற்றும் ஸ்கிரீன்களை மூடி வைக்கவும். அது போல இரவு நேரங்களில் காற்றோட்டமாக இருக்க பகலில் மூடி வைத்திருந்த ஜன்னல்கள், ஸ்கிரீன்களை திறந்து வைக்கவும். உங்கள் ரூமின் வெப்பநிலையை கட்டுப்படுத்த ஃபேன் அல்லது ஏர் கண்டிஷனிங்கை பயன்படுத்தலாம்.
தரமான மெத்தை & தலையணை: நீங்கள் பயன்படுத்தும் தரமற்ற பெட் மற்றும் தலையணை கூட உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கலாம். நல்ல தரமான மெத்தை மற்றும் தலையணைகளை பயன்படுத்துங்கள். அதே போல கோடை காலத்தில் நீங்கள் காட்டன் மற்றும் கைத்தறி போன்ற லைட்வெயிட் மற்றும் காற்றோட்டமான துணிகளை படுக்கையில் பயன்படுத்தலாம். இது போன்ற துணி வகைகள் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுவதோடு, இரவு முழுவதும் வசதியாக தூங்குவதை உறுதி செய்கிறது.
இரவு நேர வழக்கங்கள்: தூங்குவதற்கான நேரம் இது என்பதை உங்கள் உடல் மற்றும் மூளைக்கு உணர்த்த புத்தகம் படிப்பது, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, தியானம், பிடித்த இசை கேட்பது அல்லது யோகா போன்ற அமைதியான சில இரவு நேர வழக்கங்களை பின்பற்றுங்கள். தூங்க செல்வதற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முன்பாகவே மொபைல் மற்றும் டிவி-க்கு டாட்டா சொல்லிவிடுங்கள்.
ஹைட்ரேட்டாக இருங்கள்: உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் போவதும் தூக்கத்தை சீர்குலைக்கும். எனவே கோடை காலத்தில் பகல் நேரங்களில் உங்கள் உடலுக்கு போதுமான தண்ணீரை மற்றும் திரவங்களை பருகுவதில் கவனம் செலுத்துங்கள். அதே நேரம் தூங்க செல்வதற்கு முன் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும், இல்லை என்னால் சிறுநீர் கழிக்க அடிக்கடி எந்திரிக்க நேரிட்டு அதனால் தூக்கம் கெடும்.
காஃபின் & ஆல்கஹாலை தவிர்க்கவும்: காஃபின், ஆல்கஹால் ஆகிய இரண்டுமே உங்கள் தூக்க சுழற்சியில் தலையிடுபவை. குறிப்பாக மாலை அல்லது இரவு நேரங்களில் தூங்க செல்லும் முன் காஃபின் பானங்கள் அல்லது ஆல்கஹால் நுகர்வை தவிர்க்கவும். இவற்றுக்கு பதில் தூங்க செல்லும் முன் தூக்கத்தை ஊக்குவிக்கும் ஹெர்பல் டீ அல்லது ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
ஓளி மற்றும் சத்தத்தை தவிர்க்க... கோடை காலத்தில் வழக்கத்தை விடமுன்னதாகவே சூரியன் உதிக்கும், தவிர சத்தத்தை உருவாக்கும் வெளிப்புற நடவடிக்கைகள் அதிகமாக இருக்கலாம். ஒளி மற்றும் இரைச்சல்கள் உங்கள் தூக்க சுழற்சியை சீர்குலைக்கலாம். எனவே ஒளியை தடுக்க பிளாக்அவுட் கர்டெயின்ஸ்களை பயன்படுத்தலாம், இரைச்சல் உங்கள் தூக்கத்தை கெடுப்பதை தவிர்க்க இயர்பிளக்ஸ் அல்லது ஒயிட் நாய்ஸ் மெஷின்களை பயன்படுத்தலாம்.
நிலையான தூக்க அட்டவணை: எல்லா நாளும் இரவு ஒரே நேரத்தில் தூங்க செல்வது மற்றும் காலை ஒரே நேரத்தில் கண்விழிப்பது உங்கள் தூக்க சுழற்சியை சீராக்க உதவும். வார இறுதி நாட்களாக இருந்தாலும் கூட உங்களது உறங்கும் நேரம் மற்றும் எழுந்திருக்கும் நேரங்களை சீராக பராமரிப்பது என்பது எப்போது தூங்கி எழுந்திருக்க வேண்டும் என்பதை உங்கள் உடல் மற்றும் மனம் கற்று கொள்ள உதவும்.
கேன் தண்ணீர் குடிப்பதற்கு நன்றாக இருந்தாலும் அதனால் உண்டாகும் பாதிப்பு பல மடங்கு என உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (RO) என்று சொல்லக் கூடிய ஆர்ஓ நீரை மாதக்கணக்கில் உட்கொண்டால் கடுமையான பக்க விளைவுகளை உருவாக்கும் என்று WHO எச்சரிக்கிறது.
குழாய் நீரில் காணப்படும் அசுத்தங்களை விட ஆர்ஓ நீரைக் குடிப்பது அதிகமான உடல் தீங்கை உண்டாக்கும் என அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளிலும் தண்ணீரை சுத்திகரிக்க ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (ஆர்ஓ) அமைப்புகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆர்ஓ சிஸ்டம் தண்ணீர் அசுத்தங்களை நீக்குகிறது என்பது உண்மைதான் என்றாலும் அதோடு சேர்ந்து நன்மை பயக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியத்தையும் 92-99% நீக்குகின்றன என்பது தெரியுமா..?
RO நீர் தொடர்பான நூற்றுக்கணக்கான அறிவியல் ஆய்வுகளைப் பகுப்பாய்வு செய்த பிறகு, உலக சுகாதார நிறுவனம் அத்தகைய நீர் விலங்கு மற்றும் மனித உயிரினத்தின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வெளியிட்டுள்ளது. அப்படி RO நீரை உட்கொள்வதால் இருதயக் கோளாறுகள், சோர்வு, உடல் பலவீனம் , தசைப்பிடிப்பு, கால்சியம் குறைபாடு ஆகிய பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். இதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
உணவு தாதுக்கள் RO நீரில் உள்ள தாதுப் பற்றாக்குறையை ஈடுசெய்யாது : போதுமான கனிமங்கள் இல்லாத RO நீர், உட்கொள்ளும் போது, உடலில் இருந்து தாதுக்களை வெளியேற்றுகிறது. இதன் பொருள் உணவு மற்றும் வைட்டமின்களில் உட்கொள்ளும் தாதுக்கள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகின்றன. குறைவான கனிமங்கள் மற்றும் அதிக தாதுக்கள் வெளியேற்றப்படுவது கடுமையான எதிர்மறை பக்க விளைவுகளையும் பெரிய அளவிலான உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
உணவின் மூலம் உட்கொள்ளும் கனிமங்கள் RO நீரில் உள்ள தாதுப் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியுமா என்று கண்டறிய ஒரு அறிவியல் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் , விஞ்ஞானிகள் நீரிலிருந்து குறைக்கப்பட்ட கனிம உட்கொள்ளலை அவர்களின் உணவுகளால் ஈடுசெய்ய முடியாது என்று முடிவு செய்தனர்.
RO நீர் குடிப்பது உடல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீரில் கரைந்துள்ள எலக்ட்ரோலைட்டுகளை அழிக்கிறது. இதனால் உறுப்புகளுக்கு ஆற்றல் கிடைக்காமல் போகிறது. இதனால் அதன் இயக்கங்களும் தடைபடுகிறது. இந்த நிலை ஆரம்பத்தில் பக்க விளைவுகளாக சோர்வு, பலவீனம் மற்றும் தலைவலி போன்றவற்றை உண்டாக்குகின்றன. மிகவும் கடுமையான அறிகுறிகளாக தசைப்பிடிப்பு மற்றும் பலவீனமான இதய துடிப்பு ஆகிய அறிகுறிகளை அனுபவிக்கலாம். எனவேதான் RO குடிநீர் சுகாதாரக் கேடு என எச்சரிக்கின்றனர்.
அதுமட்டுமன்றி உயர் இரத்த அழுத்தம், கரோனரி இதய நோய், இரைப்பை புண்கள், நாள்பட்ட இரைப்பை அழற்சி, கர்ப்ப சிக்கல்கள் மற்றும் மஞ்சள் காமாலை, இரத்த சோகை, எலும்பு முறிவுகள் மற்றும் வளர்ச்சி கோளாறுகள் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு RO நீர் ஆபத்து காரணியாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிலர் குடிப்பது மட்டுமன்றி சமையலுக்கும் பயன்படுத்துவார்கள். அப்படி சமையலுக்குப் பயன்படுத்தும் போது, உணவு ,காய்கறிகள், இறைச்சி, தானியங்கள் ஆகியவற்றிலிருந்து அனைத்து அத்தியாவசிய கூறுகளை இழக்க நேரிடும். இத்தகைய இழப்புகள் மெக்னீசியம் மற்றும் கால்சியத்தை 60 % வரை அழித்துவிடும். சில நுண் தாதுக்களான தாமிரம் 66 %, மாங்கனீசு 70 %, கோபால்ட் 86 % என அழிந்துபோகும். எனவே சமையலுக்கு RO நீரை பயன்படுத்துவது மிகவும் தவறான முடிவு என்கின்றனர்.
இதற்கு மாற்று வழியாக தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்கலாம். இதனால் அதன் கெட்ட பண்புகள் அழிந்துவிடும் என்பது அர்த்தமில்லை. அதில் இருக்கும் இரசாயனங்கள் கணிசமான அளவு குறையலாம் என நம்பப்படுகிறது. இது முழுமையான மாற்றுவழி இல்லை என்றாலும் இதை செய்தால் கொஞ்சமேனும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
கம்ப்யூட்டரை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் கண் பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என அழைக்கப்படுகிறது.
இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கிய அறிகுறிகள் கண் சோர்வு, கண் வலி, தலைவலி, கண் எரிச்சல், கண் நீர் வடிதல், பார்வை கோளாறு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி போன்றவை ஆகும்.
யாருக்கு பாதிப்பு ஏற்படும் தினமும் 3-4 மணி நேரத்திற்கு மேல் கணினி உபயோகிப்பவர்களில் 75 சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. கம்ப்யூட்டரினால் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமானவை கம்ப்யூட்டர் மற்றும் அருகில் உள்ள விளக்குகளில் இருந்து ஏற்படும் ஒளி சிதறல்கள்.
கண் சிமிட்டாமல் மானிட்டரை பார்ப்பது, கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் அதற்குரிய சரியான கண்ணாடி அணியாமல் வேலை செய்வது போன்றவை ஆகும்.
கண் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகள் கம்ப்யூட்டர் மானிட்டர் கண்களில் இருந்து 25 இன்ச்க்கு மேலான தொலைவில் இருக்கவேண்டும். மானிட்டர் கண்களில் மட்டத்தில் இருந்து 6 இன்ச் தனிவாக இருக்க வேண்டும்.
20-20-20 விதி கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 வினாடிகளுக்கு, 20 அடிக்கு மேலான தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். தொலைவில் பார்ப்பது கண்களுக்கு ஓய்வு தரும்.
கண்ணில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் உலந்து இருப்பது போல் உணருதல் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்து சொட்டு மருந்துகள் உபயோகிக்கலாம். கம்ப்யூட்டரை தவிர்ப்பது மிகவும் கடினம். ஆனால் அதனால் ஏற்படக் கூடிய இந்த கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோமை நிச்சயம் தவிர்க்கலாம்.
கம்ப்யூட்டரை கவனமாக பயன்படுத்துங்கள்! கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள். Dr. B.மேஷாக் பீட்டர், MBBS, D.O.,கண் மருத்துவ நிபுணர் ராஃபா கிளினிக்தென்காசி.
அரிசியில் பல வகைகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றும் உடலுக்கு பல நன்மைகளை தருபவையாக இருக்கிறது. அந்த அரிசி வகைகளில் ஒன்றான சிவப்பு அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். மாமிசம், வறுக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால், அதை உண்ணும் போது செரிமான உறுப்புக்கள் அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம் சிரமப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.
சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது. தினமும் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.
குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும், நல்ல உடல் மற்றும் மன வளர்ச்சி பெறவும் அவர்கள் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும். சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும்.
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அல்லது குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் கொழுப்பு அதிகம் இல்லாத உணவுகளை சாப்பிடுவதோடு, உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்கள் விரைவில் உடல் எடை குறைக்க காலை உணவாக சிவப்பு அரிசி புட்டு, இடியப்பம் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைக்க முடிகிறது.
சிவப்பு அரிசியில் "புரதம், நார்ச்சத்து, போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது.
மனிதர்களின் உடல் எப்போதும் சராசரியான உடல் வெப்பத்தை கொண்டிருக்க வேண்டும்.
கோடை காலங்களில் எல்லா மனிதர்களுக்கும் உடல் சூடு அதிகரித்து, அதிகம் வியர்த்து உடலின் சில அத்தியாவசிய சத்துக்கள் வியர்வை வழியாக வெளியேறிவிடுகிறது. இந்த சமயங்களில் சிவப்பு அரிசியுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் உடல்உஷ்ணம் அதிகரிப்பதை தடுத்து உடலை குளிரச்செய்யும். குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட புட்டு மற்றும் இதர வகையான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
நீரிழிவு நோய் தாக்கம் கொண்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமுள்ள வெள்ளை அரிசி போன்றவற்றை அதிகம் சாப்பிட கூடாது. ஆனால் அந்த அரிசிக்கு மாற்றாக நீரிழிவு நோயை நன்கு கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை காலை மற்றும் மதிய வேளைகளில் சாப்பிட்டு வருவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
இன்றைய காலங்களில் உலகெங்கிலும் இருக்கும் மக்கள் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இதனால் மனிதர்களுக்கு பல்வேறு விதமான புற்று நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடல் புற்று.
சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. முப்பது வயதை கடக்கின்ற ஆண்களும், பெண்களும் ரத்த கொதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகமாகிறது.
சிவப்பு அரிசி ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.
பாலைவிட தயிர் பலமடங்கு சிறப்பானது, ஆரோக்கியம் நிறைந்தது. ஆம்...! தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
தயிர் குளிர்ச்சியானது மட்டுமல்ல, நல்ல ஜீரண சக்தியை தரக்கூடியதாகும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில், 32 சதவீதம் பால்தான் ஜீரணமாகும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில்91 சதவீதம் ஜீரணிக்கப்பட்டுவிடும்.
பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரித்து, நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. எனவே தான் வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தயிரை தினமும் உணவின் ஒரு அங்கமாக சேர்த்துக்கொள்வதால் பல நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக தயிரில் வைட்டமின் பி-12, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் தாது உப்புகள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும். தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். மன அழுத்தம், சோர்வை உண்டாக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் சுரத்தலை தயிர் கட்டுப்படுத்துகிறது. தயிரில் வைட்டமின் பி-12, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் தாது உப்புகள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும்.
எப்போது, எதனுடன் சேர்த்து சாப்பிடுவது? தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதியம்.
இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும்.
கோடை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிடலாம். தயிருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், வாய்ப்புண், பல் வலி குணமாகும். காரணம், இதில் ஆன்டிபாக்டீரியல் தன்மைகள் ஏராளமான அளவில் உள்ளன.
தயிருடன் ஓமம் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையில் இருந்து விடுபடலாம். தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். இது சிறுநீரக பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும். தயிருடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோபயோடிக் பாக்டீரியாக்கள், பெப்ரைன் ஆகியவை மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சினையில் இருந்து விடுவிக்கும்.
தயிர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் மூட்டு வலியைக் குறைக்க உதவும். இதில் வைட்டமின்-சி அதிகம் உள்ளதால், முதுமையையும் தடுக்கும்.
பழங்கள், உலர் பழங்கள் இவற்றில் எதை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. பழங்களை எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் அவை உடலுக்கு ஆரோக்கியம்தான்.
'பிரஷ்ஷாக' கிடைக்கும் பழங்களில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதோடு அவை ஊட்டச்சத்துக்களாலும் நிரப்பப்பட்டிருக்கும். இருப்பினும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எவற்றில் அதிகமாக இருக்கிறதோ அதை சாப்பிடுவது சிறந்தது.
உலர்ந்த பழங்கள், பிரஷ் பழங்கள் இவற்றில் எது சிறந்தது என்பது குறித்து பார்ப்போம்.
வைட்டமின்கள்: பிரஷ் பழங்களில் ஏ, பி மற்றும் சி நிறைந்திருப்பதோடு அவை உடலில் நீரிழப்பை தடுக்கும் தன்மை கொண்டவை. உலர்ந்த பழங்களில் நீர்ச்சத்து இருக்காது. சில நேரங்களில் வெப்ப உணர்திறன் காரணமாக அவற்றில் இருந்து வைட்டமின்களும் அகற்றப்பட்டிருக்கும். ஆதலால் வைட்டமின்களை உள்ளடக்கி இருப்பதில் உலர் பழங்களை விட பிரஷ் பழங்கள் சிறந்தவை.
சர்க்கரை: பிரஷ் பழங்களுடன் ஒப்பிடும்போது உலர் பழங்களில் அதிக சர்க்கரை உள்ளடங்கி இருக்கும். பெரும்பாலும் உலர்ந்த பழங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதனால் உடலில் சர்க்கரை அளவை குறைக்க விரும்புபவர்கள் உலர் பழங்கள் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
ஊட்டச்சத்து அடர்த்தி: உலர் பழங் களை விட பிரஷ் பழங்களில் ஊட்டச்சத்து மதிப்பு அதிகமாக இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துக்களும் அப்படியே இருப்பதால் பிரஷ் பழங்கள் சதைப்பற்றுடன் காணப்படும். உலர்ந்த பழங்களை பொறுத்தவரை, நீர்ச்சத்து பிரித்தெடுக்கப்பட்டு வெப்பநிலையில் உலரவைக்கப்படுகின்றன. அதனால் சில சமயங்களில் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குறையக்கூடும்.
உலர் பழங்களுடன் ஒப்பிடும்போது பிரஷ் பழங்களே சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை. அதற்காக உலர்ந்த பழங்கள் மோசமானவை அல்ல. நீர்ச்சத்து இல்லாவிட்டாலும் ஆயுளை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை. எனினும் அன்றாடம் உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை நிவர்த்தி செய்வதில் பிரஷ் பழங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தினமும் உலர் பழங்கள் சாப்பிட்டாலும் கட்டாயம் பிரஷ் பழங்களையும் சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். சில இடங்களில் பழ சாகுபடி குறைவாக இருக்கும்.
குறிப்பிட்ட சீசனில் மட்டும்தான் பழங்கள் விளையும். அதனால் அங்குள்ள மக்களால் பிரஷ்ஷாக பழங்களை சாப்பிட முடியாது. அப்படிப்பட்ட சமயங்களில் உலர் பழங்களை சாப்பிடலாம். பழங்களை எந்த வடிவில் உட்கொண்டாலும் அவை உடலுக்கு நன்மை அளிக்கும்.
தண்டுவட எலும்புகள் ஒவ்வொன்றின் இடையேயும் ஒரு சதையாலான 'டிஸ்க்' இருக்கும். இந்தப் பகுதியில் எண்ணெய் போன்ற `சைனோவியல்' என்ற திரவம் இருக்கும். இரண்டு எலும்புகள் உராய்வில்லாமல் செயல்படவும், உடல் அசைவிற்கும் இது உதவுகிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், மற்றும் வயதானவர்களுக்கு அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும், காயங்கள், விபத்துக்கள் இவைகளைத் தொடர்ந்தும் தண்டுவடப் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
சித்த மருத்துவத் தீர்வுகள்:
1. அமுக்கரா சூரணம் 1 கிராம், சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி பவள பற்பம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும். (அல்லது)
அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கிமுத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
2. அமுக்கரா சூரணம் 1 கிராம், அயக்காந்த செந்தூரம் 200 மிகி, முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
3.தண்டுவட பிரச்சினைகளுக்கு எண்ணெய் மசாஜ், வர்ம மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரித் தைலம், சிவப்பு குக்கில் தைலம், விடமுட்டி தைலம், சுக்குத் தைலம், கற்பூராதி தைலம், உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை கழுத்தில் இருந்து முதுகு, இடுப்பு, கால்கள் வரை நன்றாகத் தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது நல்லது.
4.வாதமடக்கி, வாதநாராயணன், முடக்கற்றான், தழுதாழை, நொச்சி, பழுத்த எருக்கம் இலை இவைகளை எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
5. உணவில் கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகமுள்ள பிரண்டைத் தண்டு, முருங்கை கீரை, முடக்கத்தான் கீரை, முட்டை வெண் கரு, பால், தயிர், பசலைக்கீரை, பாதாம், வாதுமை, வெந்தயம், உளுந்து இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா) மின்னஞ்சல்: doctor@dt.co.in,
பண்டைய காலம் முதலே உறங்குவதற்கு முன் நமது வயிற்றில், தொப்புள் பகுதியில் எண்ணெயை தடவிக் கொண்டு தூங்குவது என்பது ஒரு வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. இந்தப் பண்டைய கால பழக்கத்தினால் உண்மையிலேயே நமது உடலுக்கும் பலவித நன்மைகள் கிடைக்கின்றன என்பதை நவீன மருத்துவம் நிரூபித்துள்ளது.
இதற்கு நீங்கள் என்ன விதமான எண்ணெயை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தேங்காய் எண்ணெய், நெய், ஆமணக்கு எண்ணெய் என்று பல்வேறு விதமான எண்ணெய் வகைகளை தூங்குவதற்கு முன் தொப்புள் பகுதியில் தடவி நன்றாக மசாஜ் செய்து விட்டு தூங்குவதால் நமக்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றன.
இவ்வாறு தூங்குவதற்கு முன் ஒவ்வொரு இரவும் இதனை தொடர்ந்து செய்து வர நமது சருமத்தின் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. மேலும் இதனால் நமது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தில் உள்ள பாதிப்புகளை சரி செய்து அவை சிறப்பாக செயல்பட உதவுகின்றன.
“பெச்சொட்டி சுரப்பி” என அழைக்கப்படும் ஒன்றினால் இவை இணைக்கப்பட்டுள்ளதாக பலர் கூறுகின்றனர். ஆனாலும் இதனை அங்கீகரிக்கும் வகையில் நவீன மருத்துவம் எந்தவித கருத்தையும் வெளிபடுத்தவில்லை, இவ்வாறு வயிற்றில் எண்ணெய் தடவிக் கொண்டு தூங்குவதால் என்னென்ன விதமான நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இப்போது பார்ப்போம்..
தூங்குவதற்கு முன் மூன்றிலிருந்து ஏழு சொட்டுக்கள் வரை நெய் மற்றும் தேங்காய் எண்ணெயை தொப்புள் பகுதியில் ஊற்றி, நன்றாக அரை அங்குலம் வரை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் கண்களில் உள்ள வறட்சி நீங்குவதுடன் கண் பார்வையும் அதிகரிக்கும்.
தூங்குவதற்கு முன் மூன்றிலிருந்து ஏழு சொட்டுக்கள் வரை கடுகு எண்ணெயை தொப்புளில் தடவி நமது வயிற்றுப் பகுதி முழுவதும் அதனை மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் மூட்டுகளில் உள்ள வலியை போக்க இது உதவுகிறது.
தூங்குவதற்கு முன் மூன்றிலிருந்து ஏழு சொட்டுக்குள் வரை ஆமணக்கு எண்ணெய் தொப்புளில் தடவி அரை அங்குலம் வரை படரவிட்டு மசாஜ் செய்யலாம். முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி போன்றவை குணமாகும். உடம்பில் உள்ள எலும்புகள் அனைத்துமே வலிமை பெறும்.
முகத்தில் உள்ள முகப்பருக்களை போக்குவதற்கும், சருமத்தை பளபளப்பாக வைக்கவும் மூன்றிலிருந்து நான்கு சொட்டுக்கள் வரை வேப்பெண்ணெயை இரவு உறங்க செல்வதற்கு முன் தொப்புளில் தடவி நன்றாக அரை அங்குலம் மசாஜ் செய்ய வேண்டும். இதனை தினசரி இரவு தூங்குவதற்கு முன் செய்து கடைப்பிடித்து வர கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்று பலர் கூறுகின்றனர்.
கைக்குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைத்து வயதினரும் நல்ல வாய்வழி சுகாதாரம் மற்றும் பல் சுகாதாரத்தை பராமரிப்பது அவசியம். எனினும் ஓரல் கேர் எனப்படும் வாய் சுகாதாரத்திற்கான அணுகுமுறை ஒரு நபரின் வயது மற்றும் வளர்ச்சி நிலையைப் பொறுத்து மாறுபடும்.
ஓரல் கேர்-ஐ பொறுத்தவரை கைக்குழந்தைகள், குழந்தைகள், டீனேஜர்ஸ், அடல்ட்ஸ் மற்றும் மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் அவரவர் வயது மற்றும் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தனித்துவமான கவனிப்புகள் தேவைப்படுகின்றன. நம்முடைய பற்கள் நம்மைப் போலவே பரிணாம வளர்ச்சியடையும் என்பதால் அதற்கேற்ப வாய்வழி பராமரிப்பு வழக்கத்தை நாம் பின்பற்ற வேண்டும்.
வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் வாய்வழி பராமரிப்பிற்கான பல அணுகுமுறைகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும். இதனை சரியாக புரிந்து கொண்டு சில பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளை நீங்கள் பராமரிக்கலாம். இதற்கு உதவும் வகையில் கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற வகையிலான வாய்வழி பராமரிப்பு குறிப்புகளை பிரபல ஓரல் கேர் நிபுணர் வீரேன் குல்லர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கைக்குழந்தைகள் (0-12 மாதங்கள் வரை) :
- ஒவ்வொரு முறையும் உங்கள் கைக்குழந்தைக்கு உணவளித்த பின் அதன் ஈறுகளை சுத்தமான, ஈரமான மஸ்லின் துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.
- உங்கள் குழந்தையை ஒரு பாட்டில் அல்லது சிப்பி கப்புடன் (sippy cups) படுக்க வைப்பதை தவிர்க்கவும். ஏனென்றால் இது பல் சிதைவுக்கு வழிவகுக்கும்.
- உங்கள் குழந்தைக்கு பற்கள் வளர்ந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களின் ஈறுகள் மற்றும் பற்களை சுத்தம் செய்ய இன்ஃபேன்ட் பிரஷ் அல்லது ஃபிங்கர் பிரஷ்களை பயன்படுத்தலாம்.
- 6-36 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு xylitol-லுடன் ஃப்ளோரைடு இல்லாத டூத் பேஸ்ட்டை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது பாக்டீரியாக்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதால் கேவிட்டிஸ் அதாவது பற்சிதைவு ஏற்படுவதை தடுக்கிறது.
குழந்தைகள் (3-10 வயது வரை) :
- Fluoride அடங்கிய டூத்பேஸ்ட்டை கொண்டு நாளொன்றுக்கு 2 முறை பல்லை பிரஷ் செய்ய உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கவும்.
- பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்கள் மற்றும் Plaque-ஐ அகற்ற உங்கள் குழந்தைக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை Dental floss-ஐ பயன்படுத்த உதவுங்கள்.
பல் துலக்குவதால் கிடைக்கும் நன்மைகள்
- உங்கள் குழந்தை ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளை கொண்டிருக்க ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்களை உள்ளடக்கிய ஒரு சீரான டயட்டை பின்பற்ற செய்யவும்.
- உங்கள் குழந்தையை வழக்கமான பரிசோதனைகளுக்காக மற்றும் சுத்தம் செய்ய பல் மருத்துவரிடம் வழக்கமான முறையில் அழைத்து செல்லுங்கள்.
இளம் பருவம் (10-15 வயது வரை) :
- உங்கள் இளம்பருவ குழந்தைகளை தினசரி தவறாமல் 2 முறை பிரஷ் செய்ய மற்றும் ஃப்ளோஸ் செய்ய ஊக்குவிக்கவும்.
- பற்களை சேதப்படுத்தும் சர்க்கரை மற்றும் அசிடிக் உணவுகள் (acidic foods) மற்றும் பானங்களை ஏன் தவிக்க வேண்டும் என்பதற்கான முக்கியத்துவத்தைப் பற்றி உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள்.
- Fluoride அடங்கிய டூத்பேஸ்ட்டைதொடர்ந்து பயன்படுத்துவது எனாமலை (enamel) வலுப்படுத்த உதவும்.
- Xylitol அடங்கிய டூத்பேஸ்ட்டானது கேவிட்டீஸ்களை தடுக்க உதவுகிறது.
அடல்ட்ஸ் (18-64 வயது வரை) :
- Fluoride அடங்கிய டூத்பேஸ்ட்டை கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்க வேண்டும். தவிர ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிடும் உணவுகள் தங்காதவாறு உங்கள் பற்களை மற்றும் பல் இடுக்குகளை நன்கு க்ளீன் செய்ய வேண்டும்.
- பற்சிதைவு மற்றும் பற்களின் மேற்பரப்பில் அரிப்பை ஏற்படுத்தும் சர்க்கரை, அமில உணவுகள் மற்றும் பானங்களை எடுப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
- வழக்கமான அடிப்படையில் பரிசோதனைகள் செய்து கொள்ள மற்றும் பற்களை சுத்தம் செய்ய பல் மருத்துவரை பார்க்கவும். தவிர மேலும் உங்கள் வாய் ஆரோக்கியம் குறித்து உங்களுக்கு இருக்கும் கவலைகள் மற்றும் சந்தேகங்கள் குறித்து விரிவாக விவாதிக்கவும்.
முதியவர்கள் (65 வயதுக்கும் மேற்பட்டவர்கள்) :
- Fluoride அடங்கிய டூத்பேஸ்ட்டை கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். தவிர சாப்பிடும் உணவுகள் பற்களுக்கு இடையில் தங்காதவாறு பற்களை தினசரி இன்டர்டென்டல் க்ளீனிங் செய்ய வேண்டும்.
- உங்கள் வாயை ஈரப்பதமாக வைத்திருக்க மற்றும் வாய் வறட்சியை தடுக்கவும் எப்போதும் ஹைட்ரேட்டாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பல் சிதைவு மற்றும் ஈறு நோய்களை சந்திக்க நேரிடலாம்.
- உங்கள் மருந்து முறைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உங்கள் பல் மருத்துவரிடம் பேசி சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள். ஏனெனில் சில மருந்துகள் வாய் வறட்சி அல்லது பிற வாய் சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
- பல் ஆரோக்கியம், பல் இழப்பு போன்ற முதுமை சார்ந்த ஓரல் கேர் பற்றிய கவலைகளை உங்கள் பல் மருத்துவரிடம் தெரிவித்து அதற்கான தீர்வுகளை பெறுங்கள்.
- நீங்கள் பல் செட் போன்ற செயற்கை பற்களை பயனப்டுத்தினால் அதன் மீது plaque படிவத்தை குறைக்க செயற்கை பற்களுக்காக தயாரிக்கப்படும் டூத் பேஸ்ட் மற்றும் பிரஷ்ஷை பயன்படுத்தி சுத்தம் செய்வது முக்கியம்.