Search

திருச்சியில் தரைக்கடை அமைக்க விருப்பமா..? விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது தெரியுமா?

 எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்புறமுள்ள டவுன் ஹால் மைதானத்தில் தரைக்கடைகள் அமைத்திட விரும்புவோர் வருகின்ற 30.10.2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்டம் ஆட்சியர் பிரதீப் குமார் அறிவிப்பு.

திருச்சி மாவட்டம் மற்றும் கிழக்கு வட்டம், திருச்சி டவுன். வட்டாட்சியர் அலுவலகம் முன்புறமுள்ள டவுன் ஹால் மைதானத்தில் 2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரைக்கடைகள் அமைப்பது தொடர்பாக குற்றங்குறைகளற்ற திட்டவட்டமான ஒழுங்குமுறை உடைய தெளிவான நடைமுறைகள் சென்ற ஆண்டு பின்பற்றப்பட்டது போல் நடப்பு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது ஒவ்வொரு வருடமும் நடைமுறையில் உள்ள திட்டமாகும்.

டவுன் ஹால் மைதானத்தில் பின்வரும் விவரப்படி அ. ஆ. இ பகுதி என பாகுபாடு செய்யப்பட்டு “அ” பகுதியில் 80 சதுர அடி கொண்ட 37 தரைக்கடைகளும், “ஆ” பகுதியில் 80 சதுர அடி கொண்ட 19 தரைக்கடைகளும் “இ” பகுதியில் 80 சதுர அடி கொண்ட 24 தரைக்கடைகளும் அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கடை ஒவ்வொன்றும் அனுமதி வழங்கப்படும் நாளிலிருந்து தீபாவளி பண்டிகை முடிவுறும் வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும்.

‘அ’ பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் - ரூ.7,000

‘ஆ’ பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் - ரூ.6,000

‘இ’ பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம்‌ - ரூ.5,000

தரைக்கடைகள் அமைக்க விரும்பும் நபர்கள் எந்தப் பிரிவு தரைக்கடை வேண்டுமோ அதைத் தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அதற்கான கட்டணத் தொகையை வருவாய் கோட்டாட்சியர், திருச்சிராப்பள்ளி (Revenue Divisional Officer, Tiruchirappalli ) என்ற பெயரில் வங்கி கேட்பு காசோலையாக (Demand Draft ) எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் 30.10.2023 பிற்பகல் 05.45 மணிக்குள் சேர்க்க வேண்டும்.

தரைக்கடைகள் எண்ணிக்கையைவிட மனு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதலில் ‘‘அ’’ பிரிவுக்கு குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும். அதில் இடம் கிடைக்காதவர்கள் விரும்பினால் “ஆ” பிரிவுடன் சேர்ந்து குலுக்கல் நடைபெறும். “ஆ” பிரிவில் இடம் கிடைக்காதவர்கள் விரும்பினால் “இ” பிரிவில் சேர்ந்து குலுக்கல் நடத்தப்படும்.

மேற்படி குலுக்கல் நகர வர்த்தக குழு பிரதிநிதிகள், மாவட்ட உபயோகிப்பாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திருச்சி, வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 01.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு நடத்தப்படும் என திருச்சி மாவட்டம் ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment