சொந்த தொழில் தொடங்க ரெடியா இருங்க.. ரூ.1.5 கோடி வரை கடனுதவி வழங்கும் அரசு..!!
இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இளைஞர்களிடையே சுய தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அரசு சார்பில் ரூ.1.5 கோடி கடன் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மாநில அளவில் செயல்பட்டு வரும் மாநில நிதிக் கழகம் மூலம் எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது” என தெரிவித்தார்.
இந்த TIIC அமைப்பு குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு, விரிவுபடுத்துவதற்கு மற்றும் உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கு பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில் “திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 02.06.2025 முதல் 30.06.2025 வரை நடைபெறுகிறது”. இதில் மாநில அளவில் நடப்பு நிதியாண்டின் கடன் இலக்காக ரூ.2117 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் அரசின் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கபடுகிறது. இதை தொடர்ந்து, “தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியமும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் முலம் SC/ST தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பில் 35 சதவீதம் முதலீட்டு மானியம் மற்றும் 6 சதவீதம் வட்டியுடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த முகாம் குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள 9962622939, 9445023477 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...