Search

இஞ்சியையும் மஞ்சளையும் ஒன்றாக சாப்பிடக் கூடாதா?

 இஞ்சி மற்றும் மஞ்சளில் பல மருத்துவ நன்மைகள் இருந்தாலும் இவற்றில் பக்கவிளைவுகள் இல்லை என்று சொல்ல முடியாது. இந்த மசாலா பொருட்களை அளவுக்கதிகமாக சாப்பிடும் போது வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.

மஞ்சள் மற்றும் இஞ்சி: இவற்றை ஒன்றாக சாப்பிடக் கூடாதா? பல ஆண்டு காலமாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் இஞ்சியும் மஞ்சளும் வீட்டு வைத்தியத்தில் மிகவும் பிரபலமான மருந்து மட்டுமின்றி ஒவ்வொரு இந்திய சமையலறையும் நீக்கமற இடம் பிடித்திருக்கும் பொருளாகும். ஆனால் இவை இரண்டையும் ஒன்றாக இணைத்து சாப்பிட்டால் என்ன ஆகும்? இதனால் ஏற்படும் விளைவுகள் அதிகரிக்குமா அல்லது குறையுமா? வாருங்கள் இதற்குப் பின்னால் உள்ள அறிவியலை தெரிந்துகொள்வோம்.

மஞ்சளின் நன்மைகள் : பளிச்சென்ற நிறத்தைக் கொண்ட மஞ்சள் தனித்துவமான சுவையை கொண்டது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த சர்குமின் மஞ்சளில் அதிகமாக உள்ளது. கீல்வாதத்திற்கு நிவாரணம் தருவது முதல் வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் அறிகுறிகளை போக்குவது வரை நம்முடைய பல சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது மஞ்சள். சளி, இருமல், குடல் அழற்சி நோய் போன்றவற்றை குணப்படுத்தவும் மஞ்சள் முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியின் பயன்கள் : சுவைக்கும் நறுமணத்திற்கும் பெயர் பெற்ற இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பேருகால சமயத்தில் வரும் குமட்டலை குறைப்பது முதல் மாதவிடாய் கால வலியை போக்குவது வரை என இந்த மசாலா பொருளில் ஜிஞ்செரோல் மற்றும் பாராடோல் போன்ற பல ஆக்டிவ் கலவைகள் உள்ளது.


இஞ்சியையும் மஞ்சளையும் ஒன்றாக சாப்பிட்டால் ஆபத்தா? அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் நிறைந்த இஞ்சியும் மஞ்சளும் சர்வலோக நிவாரணி என்றே நாம் நினைப்போம். இவற்றை தனித்தனியாக சாப்பிடுவதை விட ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது வீக்கத்தை சிறப்பாக கட்டுப்படுத்துவதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் நாம் இதை சற்று எச்சரிக்கையோடே அணுக வேண்டும். ஏனென்றால் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து நம்மிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை. பெரியவர்களுக்கு இஞ்சியும் மஞ்சளும் சாப்பிடுவதால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றபோதும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சில மருந்துகளோடு இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இரைப்பை குடல் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.


பக்க விளைவுகள் : இஞ்சி மற்றும் மஞ்சளில் பல மருத்துவ நன்மைகள் இருந்தாலும் இவற்றில் பக்கவிளைவுகள் இல்லை என்று சொல்ல முடியாது. இந்த மசாலா பொருட்களை அளவுக்கதிகமாக சாப்பிடும் போது வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். ரத்தம் உறைதல், டயாபடீஸ், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்து மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் இஞ்சி, மஞ்சள் கலந்த மருந்துகளை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும்.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment