பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மற்றும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து நிதி வழங்கப்படும். இந்த பள்ளிகள் மாணவர்களை அதிக அளவில் சேர்த்திருக்க வேண்டும். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்ததுடன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் சிறப்பாக இருக்க வேண்டும். கலை, இலக்கியம், நாடகம் போன்ற துறைகளில் மாணவர்களை நன்கு ஊக்கப்படுத்தி இருக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி குழு ஆகியவை சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். புரவலர்களையும் அதிக அளவில் சேர்த்திருக்க வேண்டும். இந்த திட்டம் மூலம் பெறும் நிதியை கொண்டு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறைகள், ஆய்வகம், நூலக மேம்பாடு, சுற்றுச்சுவர் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
இதுதவிர, இந்த ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தி,பரிசுகள் வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். இதற்காக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment