Search

கோடை காலத்திலும் இருமல்.. தும்மலால் அவதியா..? அவசியம் இதை ஃபாலோ பண்ணுங்க..!

 கோடை காலம் ஆரம்பித்துவிட்டாலே, அந்தப் பருவத்திற்குரிய நோய்த் தொற்றுகளும் வரிசைகட்டி வந்துவிடும். இந்த சமயத்தில் உங்களுக்கு அடிக்கடி இருமல், தும்மல் வருகிறதா? அப்படியென்றால் பருவ காலத்தில் வரக்கூடிய வைரஸ் தொற்றுகளே இதற்கு காரணமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

கோடை காலத்தில் வரக்கூடிய இதுபோன்ற அலர்ஜிகள் மிகப்பெரும் பொது சுகாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கோடை காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் உணவுகள் எளிதில் மாசடைகின்றன. மேலும் கொசுக்களாலும் அதிக நோய்கள் பரவுகின்றன. கோடை காலத்தில் வைரஸ் தொற்றுகள் வராமல் எப்படி தடுப்பது?

நல்ல சுகாதாரம்: நாம் சுத்தமும் சுகாதாரமுமாக இருந்தால் எந்த நோய் தொற்றுகளையும் பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை. வெளியிலிருந்து வந்த பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் எப்போதும் உங்கள் கைகளை சுத்தமாக கழுவுங்கள். இருமும் போதும் தும்மும் போதும் உங்கள் வாய்களை மூடிக் கொள்ளுங்கள்.

வைட்டமின் சி நிறைந்த டயட்: நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த வைட்டமின் சி உதவும். கோடை காலத்தில் ஆரஞ்சு, அன்னாசி, தர்பூசணி, திராட்சை, பெர்ரி பழங்களை அதிகமாக உட்கொள்ளுங்கள். இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதோடு உடலுக்கு தேவையான நீர்ச்சத்தையும் தரும்.

பழைய உணவுகளை சாப்பிடாதீர்கள்: கோடை காலத்தில் உணவுகள் எளிதாக கெட்டுப்போகும் வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் பாக்டீரியா அதிகமாக பெருகி உணவை கெட்டுப்போக வைக்கின்றன. ஆகவே எப்போதும் புதிதாக தயாரான உணவுகளையே உட்கொள்ளுங்கள்.

ஏசி அல்லது ஏசி அல்லாத அறை: வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்தவுடனேயே ஏசி ரூமிற்குள் நுழையாதீர்கள். இப்படி திடீரென அறையின் வெப்பநிலை மாறுவதால் உங்கள் உடலில் எளிதில் வைரஸ் தொற்று வரக்கூடும்


மூச்சுவிடுதல்: ஆழ்ந்த மூச்சுப்பயிற்சியை பழகிக்கொள்வது மிகவும் முக்கியம். நமது நுறையீரல் திறனை மேம்படுத்தவும் மன அழுத்தங்களை குறைக்கவும் இது உதவியாக இருக்கும்.

மூலிகை மற்றும் மசாலாக்கள்: இந்தியாவில் எல்லா வீட்டு சமையலறையிலும் பல்வேறு வகையான மருத்துவ மூலிகைகளும் மசாலாக்களும் தவறாமல் இருக்கும். இது பல நோய்த்தொற்றுகளுக்கும் உடல்நலப் பிரச்சனைகளுக்கும் நிவாரணமாக இருக்கும். இஞ்சி, பூண்டு அல்லது பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் இருமல் மற்றும் தும்மல் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.

இவை எல்லாவற்றையும் விட உங்களுக்கு வந்திருக்கும் நோயை முதலில் கண்டறிய மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். பலவித நோய்களுக்கும் ஒரேப்போன்ற அறிகுறிகள் இருக்கலாம். அதுவும் குறிப்பாக இருமல் மற்றும் தும்மல் போன்றவை எல்லா நோய்களுக்கும் பொதுவாக வரும் அறிகுறியாகும். கோடை காலத்தில் மிருதுவான, தளர்வான ஆடைகளை அணியுங்கள். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் அருந்துவதன் மூலம் உடலில் உள்ள நச்சுகளை எளிதாக அகற்றலாம்.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment