வலிப்பு நோய் தீர்வு என்ன?

திடீரென கை கால்களை வெட்டி வெட்டி இழுத்து வாயில் நுரை தள்ளி, கண்கள் மேலே சொருகி, நாக்கு பற்களுக்கிடையே கடிபட்டு வாயில் ரத்தம் வழிய, தன் சுய நினைவின்றி சாலைஓரத்தில் பரிதாபமாக யாரோ ஒருவர் விழுந்துகிடப்பதை நம்மில் பலர் பார்த்திருக்கிறோம்.

இது காக்காய் வலிப்புநோய் என்று கூறப்படுகிறது. இப்படி திடீரென பாதிக்கக்கூடிய இந்த நோய் பற்றிய சில தகவல்களையும், இது குறித்து நம்மிடையே இருக்கும் சில தவறான எண்ணங்களைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறாா் நரம்பியல் மருத்துவர். ஜெ.பாஸ்கரன்.

வலிப்பு நோய் என்பது என்ன..

வலிப்பு என்பது எபிலெப்சி என்று ஆங்கிலத்திலும், காக்காய் வலிப்பு என்று தமிழிலும் அறியப்படும் நரம்பு மண்டல நோய். சிறிது நேரமே இருக்கக் கூடிய ( சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை) நினைவை இழக்கச் செய்யக்கூடிய, கை ,கால் வெட்டி இழுக்கக் கூடிய செயல்களை உள்ளடக்கிய ஒரு சம்பவம் அல்லது நிகழ்வு என்றளவிலேயே இதனை பார்க்கிறோம். பொதுவாக எந்த காரணமும் இல்லாமல் ஏற்படும் வலிப்புகளே அதிகமாகக் காணப்படும். இவையே எபிலெப்சி அல்லது காக்காய் வலிப்பு என்றழைக்கப்படுகிறது.

இதைத் தவிர, மூளைக்கு வெளியே ஏற்படும் மாற்றங்களால் , மூளை பாதிக்கப்படுவதனால் வலிப்பு ஏற்படுகிறது. உதாரணமாக, சாலை விபத்துக்களால் தலையில் ஏற்படும் காயங்கள், உயரத்திலிருந்து விழுதல், மூளைக் கட்டிகள், ரத்த ஓட்ட பாதிப்புகள், நோய்த் தொற்றுகள், மூளைக் காய்ச்சல், மெனிஞ்ஜைடிஸ் போன்றவற்றினால் வலிப்பு நோய் ஏற்படுகிறது. மேலும், பொதுவான நோய்களான சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றாலும் சிலநேரம் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றில் ஏதாவது ஒன்றின் காரணமாக ஏற்படுவது காரண வலிப்பு (Secondary Seizures) என்றழைக்கப்படுகிறது.

வலிப்பு எதனால் ஏற்படுகிறது.

நரம்பு மண்டலம் என்பது நியூரான் எனப்படும். சிறிய நரம்பு செல்களால் பின்னப்பட்ட ஒரு வலை போன்றது. மூளை, தண்டுவடம், நரம்புகள் எல்லாம் அடங்கியதுதான் இந்த நரம்பு மண்டலம். இதன் முக்கியமான பணி, தசை அசைவுகள், தொடு உணர்ச்சிகள், பல்வேறு உறுப்புகளின் பணிகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவை ஆகும். நியூரான்களின் மின் அதிர்வுகள் சில காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டு, சமநிலையில் இயங்குகின்றன. ஆனால், வலிப்பின் போது, இந்தச் சமநிலை பாதிக்கப்பட்டு, மின் அதிர்வுகள் அளவுக்கு அதிகமாக உருவாக, அருகருகே உள்ள நரம்புகளுக்குப் பரவுவதால், மூளைக்குள் ஒரு மின்புயல் உருவாகிறது அதுவே வலிப்பு வரக் காரணமாகிறது.

வலிப்புகளில் இரண்டு வகை உள்ளன. ஒன்று மேற்கூறியபடி மூளையிலேயே உருவாவது, இன்னொன்று விபத்துகளால் ஏற்படுவது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்றால், இந்த வலிப்பு எப்போது வரும், என்ன செய்தால் வரும் என்பது போன்ற முன்னெச்சரிக்கை ஏதுமின்றி வருமாகையால், இந்த நோயாளிகளுக்கு எப்போதும் மனதில் ஒரு வித பய உணர்ச்சி இருந்துகொண்டேயிருக்கும். அதுபோன்று யாருக்கு வரும் என்பதும் முன்கூட்டியே கணிக்க முடியாது..

வலிப்பு நோய்க்கான பரிசோதனைகள் என்னென்ன..

பொதுவாக வலிப்பு நோயாளிகளின் வலிப்பின் வகையறிதலே சவாலானது. வலிப்பு நேரும்போது நோயாளி தன் சுயநினைவை இழந்துவிடுவதால் அவருக்கு என்ன செய்தது என்பது அவருக்கே தெரியாது. இதனால் அவரால் முழு சம்பவத்தையும் விவரிக்க இயலாது. எனவே, அவருக்கு என்ன வகை வலிப்பு என்பதை அறிவதில் சிரமம் உண்டு. மேலும், ஒருவருக்கு வலிப்பு ஏற்படும்போது அதனை நேரில் கண்டவர்களோ, அருகில் இருப்பவர்களோதான் அவருக்கு என்ன நேர்ந்தது என்று விவரிக்க முடியும். அவர்கள் கூறுவதை வைத்துதான் வந்தது வலிப்பு
தானா,, எந்த வகை வலிப்பு.. என்ன காரணங்களால் ஏற்பட்டது என்று கண்டறிய வேண்டும். அதைக் கொண்டு பரிசோதனைகள் தொடங்க வேண்டும்.

இதற்கு ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன், ஈசிஜி,எக்கோகார்டியோகிராம் போன்ற பரிசோதனைகள் வலிப்புக்கான காரணங்களை கண்டறிய உதவுகிறது.ஒருவேளை வலிப்புக்குத் தொற்று நோய், மூளைக்காய்ச்சல் காரணமா என்பதை கண்டறிய முதுகில் தண்டுவடத்தைச்சுற்றியுள்ள நீரை எடுத்து (LUMBAR PUNCTURE) போன்ற பரிசோதனைகளும் செய்யப்படும். மேலும், வலிப்பு நோயறிதலில் மிக முக்கியமான , எளிமையான, மலிவான, பயம் இல்லாத ஒரு பரிசோதனை ஈஈஜி (Electro ENCEPHALOGRAM) ஆகும். இதன் மூலம், மூளையின் மின்அதிர்வுகளைப் பதிவு செய்து, வலிப்பு நோய் பற்றி அறிய முடியும். நோயாளி அமர்ந்திருக்கும் போதும், தினசரி வேலைகளைச் செய்யும் போதும் அம்புலேடரி போர்டபிள் மெஷின் மூலமாகவும் ஈஈஜியை பதிவு செய்யமுடியும்.

வீடியோ ஈஈஜி டெலிமெட்ரி மூலம் ஒரு நாள் முழுதும் நோயாளியையும், மூளை மின்னதிர்வுகளையும் பதிவு செய்து, வலிப்பு மற்றும் வலிப்பு போன்றே வரும் மற்ற நோய்களையும் பிரித்தறிய முடியும். வலிப்பு நோய்களையும் அதன் காரணங்களையும், மன உளைச்சலால் வரக்கூடிய பொய் வலிப்புகளையும் (PSEUDOSEIZURES), பிறந்த குழந்தைக்கு வரும் வலிப்பு ( Neonatal) வலிப்புகளையும் கண்டறிய ஈஈஜி முக்கியமானது.

அதுபோன்று சிடி ஸ்கேன். மூளையில் இருக்கும் கட்டிகள், ரத்தக் கசிவு, ரத்த ஓட்டம் அடைபடுவதால் வரும் இன்ஃபார்க்ஷன் போன்ற பல நோய்களைத் தெளிவாக அறிய உதவுகிறது. இதுதவிர, எம்.ஆர்.ஐ. இவ்வகை ஸ்கேன் மிகவும் சக்தி வாய்ந்த காந்தப் புலத்தைப் (Magnetic Field) பயன்படுத்தி மூளை மற்றும் வேறு திசுக்களின் அதிர்வலைகளை கம்ப்யூட்டர் மூலம் முப்பரிமாண பிம்பங்களாகப் பதிவு செய்ய முடியும்.

வலிப்புநோயைப் பொறுத்தவரை எம்.ஆர்.ஐ, சிடி ஸ்கேன்களைவிட, அதிக விவரங்களை அளிக்க வல்லது அதிலும் சிறு குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது பெட் ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை. மூளையின் எந்தப் பகுதியிலிருந்து வலிப்பு உருவாகிறதோ, அந்தப் பகுதியின் ரத்த ஓட்டத்தை ( அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளதை) என்பதை தெளிவாக நமக்கு தெரிவிக்கின்றது. இம்மாதிரியான பரிசோதனைகள் மூலம் மூளையின் கட்டமைப்பில் ஏற்படும் மாறுதல்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளமுடியும்.

வலிப்புநோய்க்கான தீர்வு..

வலிப்புகளைக் கட்டுக்குள் கொண்டு வர, மருந்துகளை அவசியம் 2 முதல் 5 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். சில கட்டுக்கடங்கா வலிப்புகளுக்கு , வாழ்நாள் முழுவதும் கூட மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், இது மிகவும் குறைந்த சதவிகிதம்தான்.
ஒருவருக்கு வலிப்பு வரும்போது செய்ய வேண்டியவை..

ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுவிட்டால், கூச்சலிடாமல் அமைதியாகஅவரைக் கையாள வேண்டும். முதலில் அவரைப் படுக்கவைக்க வேண்டும். பின்னர் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தால், அதை கழற்றிவிட வேண்டும். பின்னர், உடைகளை சற்று தளர்த்திவிட வேண்டும். ஒருகளித்து பக்கவாட்டில் படுக்க வைக்க வேண்டும். இப்படி செய்யும்போது அவரது வாயில் இருந்து வெளியேறும் எச்சில், நுரை போன்றவை வெளியேற சுலபமாகும். நோயாளி முட்டி மோதி அடிபடுவதை தவிர்க்க அருகில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

சிறிய தலையணை அல்லது துணி முடிப்புகளை தலைக்கு அடியில் வைக்கலாம். அடிபட்டிருந்தாலோ, ஐந்து நிமிடங்களுக்கு மேல் வலிப்பு நீடித்தாலோ அல்லது நிற்காமல் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தாலோ, வலிப்பு நின்ற பிறகும் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டாலோ உடனடியாக மருத்துவர்களையோ, ஆம்புலன்ஸையோ உதவிக்கு அழைக்க வேண்டும்.

செய்யக் கூடாதவை:

நோயாளியைச் சுற்றி கூட்டமாக நிற்கக் கூடாது. ஏனென்றால் நோயாளிக்கு காற்றோட்டமான சூழல் மிகவும் அவசியம். வாயில், பற்களுக்கிடையில், எந்த ஒரு பொருளையும் (ஸ்பூன், கட்டை, கை ) வைக்கக்கூடாது. இரும்புக் கம்பிகள், சாவிக்கொத்து போன்ற கூர்மையான பொருளை நிச்சயமாக கொடுக்கக்கூடாது. வெட்டி இழுக்கும்போது இது போன்ற ஆயுதங்கள் நோயாளியின் கண்களையோ, வேறு பகுதியையோ குத்தி ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உண்டு. முக்கியமாக இரும்பு போன்ற உலோகங்கள் வலிப்புகளைக் கட்டுப்படுத்தும் என்பது மிகவும் தவறானது.

வெட்டி இழுக்கும் கை , கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பை நிறுத்த முயற்சிக்கக்கூடாது. முழு சுய நினைவு வரும் வரை, நோயாளிக்கு எதுவும் குடிக்கவோ, சாப்பிடவோ கொடுக்கக் கூடாது. மூளை நரம்புகளின் மாறிய அதிர்வுகள் அல்லது மாற்றி செலுத்தப்படும் மின்அதிர்வுகளே வலிப்புக்கான காரணம் என்பது ஆராய்ச்சிப் பூர்வமாக உணர்த்தப்பட்டுள்ள உண்மை ஆகும். மற்றபடி வலிப்புநோய் ஒரு சாபக்கேடோ, வாழ்வின் முடிவோ அல்ல. வலிப்புகளை மீறி வெற்றிகளைக் குவித்த சாதனையாளர்களும் இங்கு உண்டு.



 Click here to join whatsapp group for daily health tip

இருமல் தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் ஓமம் !!

 சித்த மருத்துவத்தில் முக்கியமான ஒரு மருந்துப் பொருளாக ஓமம் பயன்படுத்தப்படுகிறது.

ஓமம் ஏராளமான ஊட்டச் சத்துகளை கொண்டுள்ளது. ஓமத்தில் புரோட்டின், பைபர், சோடியம், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் B1, B3, கொழுப்பு, மினரல், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் இடம்பெற்றுள்ளன.











மலச்சிக்ககல் பிரச்சனையை சரி செய்கிறது. குடல், வயிறு, உணவுக்குழாய் பகுதிகளில் உள்ள புண்களை குணப்படுத்தும் ஆற்றலையும் ஓமம் கொண்டுள்ளது.

சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஓமம் ஒரு சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகிறது. நுரையீரலுக்கான காற்றோட்டத்தை அதிகரிக்க ஓமம் உதவுகிறது. இதனால் இருமல் தொல்லையில் இருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது. சளியை வெளியேற்றுகிறது. இதன் மூலம் மூக்கடைப்பு தொல்லையில் இருந்தும் நமக்கு நிவாரணம் கிடைக்கிறது.

ஓமம் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும். ஓமத்தை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் குடிக்கலாம். இதனால், கொழுப்பு குறைந்து தொப்பையை குறைக்க உதவுகிறது. மேலும், ஓமம் தண்ணீர் குடிப்பதால், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகின்றன.

வாயு மற்றும் ஆஸ்துமா பிரச்னையால் பலர் சிரமப்படுகின்றனர். எதைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு கேஸ் ஏற்படும். அத்தகைய சூழலில் ஓமம் தண்ணீரை குடித்தால் சில நாள்களில் நல்ல பலன் தெரியும். ஓமம் விதைகளை ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தினால் 3-4 கிலோ எடை நிச்சயம் குறையும் என்று கூறப்படுகிறது.


Click here to join whatsapp group for daily health tip

தீக்காயங்களை ஆற்றும் தன்மை கொண்டவையா மூலிகைகள்?

 சிலவகை மூலிகைகளுக்கு காயங்களை ஆற்றும் தன்மை உண்டு என கேள்விப்பட்டேன்... எந்த மூலிகை, எப்படிப்பட்ட காயத்தை ஆற்றும் என்று சொல்ல முடியுமா?

இவை தீக்காயங்களையும் ஆற்றுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி...

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

வெட்டுக்காயப் பூண்டு அல்லது கிணற்றுப்பாசான் என்பது ட்ரைடக்ஸ் புரொகும்பென்ஸ் (Tridax procumbens) எனப்படும் சூரியகாந்தி செடி வகையைச் சேர்ந்தது. இந்தச் செடி வெட்டுக்காயங்கள், சிராய்ப்புக் காயங்கள், ஆறாத புண்கள் போன்றவற்றை ஆற்றும் என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தச் செடியில் ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி தன்மையும், காயத்தை ஆற்றும் தன்மையும் உண்டு. ஒரு புண் ஆற வேண்டுமென்றால் அதைச் சுற்றி ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அந்தத் தன்மையும் இந்தச் செடியில் உண்டு என்பதால் விரைவாக புண்ணை ஆற்றுகிறது. காயம் ஏற்பட்டால் அதிலிருந்து ரத்தம் அதிகம் வெளியேறாமல் தடுத்து, புண்ணை சீக்கிரம் ஆற்றுவதற்கான செயலைச் செய்கிறது.

மிக முக்கியமாக காயம் ஆறினாலும் அந்த இடத்தில் வடுவோ, தழும்போ ஏற்படாதபடி பார்த்துக்கொள்வதிலும் இந்த மூலிகைக்குப் பங்கு உண்டு. வெட்டுக்காயமே ரத்த நாளங்களை பாதிக்கும் அளவுக்கு ஆழமாக இருப்பின் மூலிகை வைத்தியமெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. உடனே அவசர சிகிச்சை மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் ரத்தப்போக்கு அதிகம் வெளியேறும். பிளேடு, கத்தி போன்றவை வெட்டி ஏற்படும் லேசான காயங்களுக்கும், கீழே விழுவதால் ஏற்படும் சிராய்ப்புக்காயங்களுக்கும் மட்டுமே மூலிகை சிகிச்சை உதவும்.

நீங்கள் கேட்டுள்ள தீக்காயத்துக்கு உடனடியாக எமர்ஜென்சி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அந்தக் காயம் ஆறிவரும்போது, வெட்டுக்காய்ப் பூண்டின் இலைகளை அரைத்துப் பற்றுப்போட்டால் காயத்தால் ஏற்படும் தழும்பைத் தவிர்க்கலாம். புண்ணை சீக்கிரம் ஆற்றவும் உதவும்.


Click here to join whatsapp group for daily health tip

பற்களில் அடிக்கடி வலி ஏற்படுகிறதா..? பல் சுகாதாரத்தைப் பேணி காக்க இத மட்டும் செய்யுங்க போதும்!

 நாம் சாப்பிடும் உணவு மற்றும் பானங்களிலிருந்து பில்லியன் கணக்கான பாக்டீரியக்களால் பல் சிதைவு ஏற்படுகிறது. எனவே பற்களைப் பராமரிப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

“பல் போனால் சொல் போகும்“ என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.. நம்முடைய குரல் வெளிப்படுவதற்கு மற்றும் முகத்தை அழகாகக் காண்பிப்பதற்கும் உதவியாக உள்ளது பற்கள் தான். இதோடு மட்டுமில்லை இதய நோய்கள், இரத்தச்சோகை, சர்க்கரை நோய்கள், வயிற்றுக்கோளாறுகள் போன்ற உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கான அறிகுறிகளை பெரும்பாலும் வாய் மற்றும் பற்களில் தான் முதலில் தெரியவரும். இதற்கு முக்கியக் காரணம் நாம் சாப்பிடும் உணவு பழக்க வழக்கங்கள் தான்.

பல் சிதைவு ஏற்படக்காரணம்?… நாம் சாப்பிடும் உணவு மற்றும் பானங்களிலிருந்து மில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் பல் தகடு எனப்படும் பயோஃபில்ம் வடிவத்தில் கழிவுகளை விடுகின்றன. இந்த பல் தகடுகள் நீண்ட காலத்திற்கு உங்கள் பற்களில் ஒட்டிக்கொண்டிருந்து இறுதியில் அமிலங்களை உருவாக்குகிறது. இது பற்களின் பற்களின் தன்மையைக்குறைப்பதோடு, பல் இடுக்குகள் மற்றும் பற்சிதைவை ஏற்படுத்துகிறது. எனவே நம்முடைய பற்களை எப்போதும் பாதுகாப்பாக வைக்காவிடில் எண்ணற்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். இந்நிலையில் தான் வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்குகிறார் பல் பராமரிப்பு பிராண்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நம்ரதா ரூபானி..

பல் சுகாதாரத்தைப் பேணிக் காப்பதற்கான வழிமுறைகள்:

பல்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு எப்போதும் நீங்கள் ஆரோக்கிய உணவைச் சாப்பிட வேண்டும். அதிகளவு சர்க்கரை உட்கொள்ளுதல் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

ஃவுளூரைடு பற்பசை மற்றும் மென்மையான பல் துலக்குதலைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது பல்களில் முட்கள் அணிந்திருந்தால் அதை மாற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பற்களின் ஆரோக்கியத்தைப் பேணிகாக்க ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று, வழக்கமான பல் பரிசோதனைகள் மற்றும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.

நாம் தினமும் அதிகப்படியான உணவுப்பொருள்களை உட்கொள்ளுவதால் நாக்கில் பாக்டீரியாக்கள் அதிகளவில் உள்ளது. எனவே ஒவ்வொரு நாளும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.

பற்களைப் பாதுகாக்கும் ஆரோக்கிய உணவுமுறைகள்:

பால்: பால் சம்பந்தப்பட்ட பொருள்களில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் உள்ளது. மேலும் கேசீன் என்ற புரதம் அதிகளவில் உள்ளதால் பல் பற்சிப்பியைப் பாதுகாப்பதோடு பல் சிதைவையும் தடுக்க உதவுகிறது.

இலை காய்கறிகள்: முட்டைகோஸ், கீரை, ப்ரோக்கோலி, போன்ற இலை காய்கறிகளில் இரும்பு, கால்சியம், ஃபோலிக் அமிலம், துத்தநாகம், மெக்னீசியம் அதிகளவில் உள்ளது. அவற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் அனைத்தும் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை நோய் மற்றும் காயங்களிலிருந்து பாதுகாக்கிறது.

நார்ச்சத்துள்ள பழங்கள் : ஆப்பிள் போன்ற நார்ச்சத்துள்ள பழங்கள் உங்கள் பற்களைப் பாதுகாப்பதற்கு சிறந்தது. இவற்றை உணவில் எடுத்துக்கொள்ளும் போது உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டுகிறது.

இதோடு வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுப் பொருள்களைச் சாப்பிடும் போது பற்களைப் பாதுகாக்க உதவியாக உள்ளது. மேலும் வாய் துர்நாற்றம் மற்றும் பல் சிதைவு, ஈறுகளில் இரத்தம் வலிதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்கின்றனர் பல் மருத்துவர்கள்...

Click here to join whatsapp group for daily health tip 

காஃபியில் இத்தனை வகைகளா..? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்..!

 

சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் உற்சாகம் தரக் கூடிய பானமாக காஃபி இருக்கிறது. சோர்வாக உணரும் தருணங்களில் சூடான காஃபி அருந்துவதற்கு ஈடான தருணம் வேறெதுவும் இல்லை. குறிப்பாக மன இறுக்கத்தை போக்குவதற்கு காஃபி உதவியாக இருக்கிறது.

காலை எழுந்து, பல் துலக்கியவுடன் குடிக்கும் சூடான காஃபி மற்றும் நீண்ட நேர பணிச் சோர்வுக்கு பிறகு அருந்தும் ஒரு காஃபி ஆகியவை நம் உடலில் புத்துணர்ச்சி செல்களை தூண்டுவதாக அமையும். காஃபி லேசாக கசப்பு சுவை கொண்டது என்றாலும் கூட, அதை யார் தான் வேண்டாம் சொல்கின்றனர்? காஃபி லவ்வர் என்றால் இன்னும் சொல்லவே தேவையில்லை. வித, விதமான காஃபிகளை அருந்த வேண்டும் என்று விரும்புவார்கள். ஆக, சர்வதேச காஃபி தினத்தில், நாமே தயார் செய்து கொள்ளக் கூடிய 5 விதமான காஃபிக்கள் குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

ஃபிராப்பே : நீங்கள் வழக்கமாக சாப்பிடும் கோல்டு காஃபியைக் காட்டிலும் இது நல்ல தேர்வாக அமையும். ஆனால், இதில் கொஞ்சம் ஐஸ் சேர்க்கப்படுகிறது. இன்ஸ்டன்ட் காஃபி தயார் செய்து, அதில் குளிர்ந்த நீர், சர்க்கரை, பால் ஆகியவற்றை கலந்து இந்த ஃபிரப்பே தயார் செய்கின்றனர். இதை வீட்டிலேயே நாம் எளிமையாக தயார் செய்து விடலாம். அந்த அளவுக்கு இலகுவாக தேவையோ, அந்த அளவுக்கு பிளெண்ட் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, கிளாஸ் பொங்கி வழியும் அளவுக்கு பிளெண்ட் செய்தால் சுவை தாறுமாறாக இருக்கும்.


திராமிசு : காஃபி என்றால், எப்போதுமே அதை பானமாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உணவுப் பொருளாகவும் எடுத்துக் கொள்ளலாம். இத்தாலி உணவு வகையைச் சேர்ந்த இந்த திராமிசுவில் முக்கிய மூலப்பொருள் காஃபி ஆகும். க்ரீம், சாக்கலேட், காஃபி ஆகியவற்றின் காம்பினேஷன் என்பது நம்மை சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்லும்.

சாக்கலேட் காஃபி ட்ரஃபிள் : சாக்கலேட் சாப்பிட அதிக விருப்பம் இல்லாதவர்களுக்கு கூட, அதன் மனம் மிகவும் பிடிக்கும். ஆக, நேரடியாக சாக்கலேட் சாப்பிடவில்லை என்றாலும், காஃபியுடன் அதனை மிக்சிங் செய்து கொள்ளலாம். இது இனிப்பும், கசப்பும் கலந்த சுவையில் இருக்கும்.

டல்கோனா காஃபி : தென் கொரியாவைச் சேர்ந்த டோஃபி என்ற பான வகை தான் டல்கோனா காஃபி என்று பரவலாக அறியப்படுகிறது. இதை எப்படி தயாரிக்க வேண்டும் என்றால், சூடான பாலில் சர்க்கரை சேர்த்து, காஃபியுடன் கலக்கவும், அதனை ஒரு கிளாஸின் பாதி அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் இப்போது மேல் பகுதியில் சில்லென்ற காஃபியை சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டும் கலந்த அனுபவம் நம் மனதை மெய்மறக்கச் செய்யும்.

ஃபில்டர் காஃபி : நீங்கள் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர் என்றால் அல்லது பெரும் ரெஸ்டாரண்டுகளுக்கு செல்கிறீர்கள் என்றால் இந்த ஃபில்டர் காஃபி என்ற வார்த்தையை பார்க்காமல் இருக்க முடியாது. கசப்பு மற்றும் இனிப்பு, ஆகியவை சரியாக கலந்துள்ள கலவை இது. இதன் மேல் நிற்கும் நுரையே நமக்கு மிகுந்த மனத்தை தரும்.


Click here to join whatsapp group for daily health tip 

காஃபி குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா..?

  பெரும்பாலான மக்கள் காலை எழுந்ததும் குடிக்க விரும்பும் காபி, நாள் முழுவதும் ஒருவரை உற்சாகமாக வைத்திருக்க பெரிதும் உதவும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் அளிப்பதை தவிர வேறு பல நன்மைகளையும் காபி கொண்டிருக்கிறது. காபி குடிப்பதை ஊக்குவிப்பது மட்டும் இந்த நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கம் அல்ல. மாறாக காபி விவசாயிகளின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆதரவளிக்க, நியாயமான வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நேரத்தில் தினசரி காபியை விரும்பி பருகுவதால் உங்களுக்கு கிடைக்கும் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

எனர்ஜி ட்ரிங்.! : காபியில் உள்ள காஃபின் நமக்கு எனர்ஜியை தரும் ஒன்றாக இருக்கிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதில் காஃபின் ஒரு முக்கிய தூண்டுதலாக இருக்கிறது. காஃபின் குறிப்பாக கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற கெமிக்கல்களின் சுழற்சியை உடலில் அதிகரிக்கிறது. சிறிய அளவிலான காஃபின் கூட நம்மை உற்சகமாக மற்றும் புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.

டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது... தினமும் 1 கப் காபி குடிப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 6 சதவீதம் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காஃபின் தவிர காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். இதிலிருக்கும் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டைப் 2 நீரிழிவு நோய்களைத் தடுக்கும். காபியில் உள்ள மெக்னீசியம் மற்றும் குரோமியம் போன்ற மற்ற தாதுக்களும் டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.


பார்கின்சன் நோய் அபாயத்தை குறைக்கும்.. பார்கின்சன் நோய் என்பது நரம்பியல் சிதைவுக் கோளாறு. பொதுவாக இது வயதான காலத்தில் ஏற்படும். தொடர்ந்து காபி குடிப்பவர்களுக்கு பார்கின்சன் நோயின் அபாயம் குறையும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கூட தினசரி மிதமான அளவு காபி குடிப்பது அவர்களின் இயக்கங்களை சிறப்பாக கட்டுப்படுத்த உதவும்.

டிப்ரெஷனை குறைக்கிறது.. காபி மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் போன்ற சிறந்த உணர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தினசரி அடிப்படையிலான வழக்கமான காபி நுகர்வு இன்பம், பாசம், நட்பு, மனஅமைதி மற்றும் அதிக மகிழ்ச்சி போன்ற நேர்மறையான உணர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே தினசரி குறைந்தபட்சம் ஒரு கப் காபியை பருகுவது டிப்ரெஷன் ஏற்படும் வாய்ப்புகளை 8% வரை குறைக்கிறது.

பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும்.. காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்த அழுத்தம், எல்டிஎல் கொழுப்பு மற்றும் பலவற்றைக் குறைப்பதன் மூலம் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கல்லீரல் பாதுகாப்பு: நம் உடல் காஃபினை ஜீரணிக்கும்போது, ​​அது பராக்சாந்தைன் என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது, இது ஃபைப்ரோஸிஸில் உள்ள வடு திசுக்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது. மேலும் இது கல்லீரல் புற்றுநோய், ஆல்கஹால் தொடர்பான சிரோசிஸ், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஹெபடைடிஸ் சி உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராட உதவும். மொத்தத்தில் தினசரி மிதமான காபி நுகர்வு கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.

இதய நோய் அபாயங்களை குறைக்கிறது.. நாளொன்றுக்கு 2 - 3 கப் காபி குடிப்பது சிறந்த ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இப்பழக்கம் இதய நோய் உட்பட இறக்கும் அபாயத்தை 10-15% குறைத்து உங்கள் ஆயுளை நீட்டிக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. நினைவில் இருக்கட்டும், மேற்சொன்னபடி அதிகபட்சம் 3 கப் வரை மட்டுமே தினமும் குடிக்கலாம்.


Click here to join whatsapp group for daily health tip 

இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் C

 CHAPTER - 1 - வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியா

CHAPTER - 2 - வேத காலப் பண்பாடு, சங்க காலம்

CHAPTER - 3 - மௌரியப் பேரரசு

CHAPTER - 4 - சமண, புத்த சமயங்கள் E

CHAPTER - 5 - குப்தப் பேரரசு

CHAPTER - 6 - விஜய நகர மற்றும் பாமினி அரசுகள்

CHAPTER - 7 - தென்னிந்திய வரலாறு 

CHAPTER - 8 - ஐரோப்பியர்கள் வருகை,வளர்ச்சி

CHAPTER - 9 - சமூக சீர்திருத்தங்கள்

CHAPTER - 10 - விடுதலை இந்தியா

CHAPTER - 11 - இந்தியா கலாச்சாரம் மற்றும் பண்பாடு

CHAPTER - 12 - இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு

CHAPTER - 13 - திராவிட கழகம் 

CHAPTER - 14 - அரசியல் கட்சிகளும்,அதன் தொண்டுகளும் 

CHAPTER - 15 - கலை,அறிவியல்,இலக்கியம் மற்றும் தத்துவ அறிஞர்கள்


வெறும் தண்ணீர் தானேன்னு நினைக்காதீங்க... அதனால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குது..!

 அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் தண்ணீரே குடிக்காமல் இருப்பதும் உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். முக்கியமாக சரியான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ளாத போது நம்முடைய மனதில் குழப்பங்களும் தேவையற்ற கோபங்களும் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. எமோஷனலின் நிறுவனத்தின் துணை நிறுவனரும் முதன்மை மனநல மருத்துவரான டாக்டர் ரோமா குமார் என்பவர் உணவு பொருட்கள் எவ்வாறு மனிதர்களுடைய மனதிலும் உடலிலும் மாறுபாட்டை ஏற்படுத்துகிறது என்பதை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.


ரேஷன் கடைகளில் 4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!!

 நியாயவிலைக் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை   மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள்  மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிபடி ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கான விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தெரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் அமைக்கப்படும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தெரிவிற்கான சரிபார்ப்புக் குழுவில் (Screening Committee) மாவட்ட வழங்கல் அலுவலரால் நியமனம் செய்யப்படும் வட்ட வழங்கல் அலுவலரும் உறுப்பினராகவுள்ளதால், அலுவலர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் சரிபார்ப்புக் குழுவின் பணிகளில் முழுமனதோடு ஈடுபட்டு ஒத்துழைக்க எதுவாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு  அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சரிபார்ப்புப் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான அலுவலர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக சம்மந்தப்பட்ட துறைகளின் மாவட்ட அலுவலர்களுக்கு  அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னரான இத்தெரிவு நடவடிக்கைக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கக்கூடும் என்பதால்,  தெரிவு நடவடிக்கைகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்துவதற்கு எதுவாக மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசுத்துறைகளும் ஒத்துழைப்பும் உதவிகளும் நல்கிட வேண்டும் என்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளில் நேர்முகத் தேர்வு மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்களை தகுந்த சான்றாவணங்களுடன் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்குமாறு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும், தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள்  ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடம் ஏற்பட்ட நாளிலிருந்து பதிணைந்து நாட்களுக்குள்ளும் பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அத்தகைய காலிப்பணியிடம் ஏற்படக் கூடும் நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்கு முன்னரும் காலிப்பணியிடங்களுக்கான விவரங்களை எழுத்து மூலமாக சங்கங்களிலிருந்து பெற வேண்டும்.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது அரசு பணியிடங்களுக்கு பின்பற்றப்படும் 200 புள்ளி இனச்சுழற்சி, இடஒதுக்கீட்டு விதிகள், முன்னுரிமை மற்றும் இதர நெறிமுறைகள் தொடர்பானநடைமுறையில் உள்ள அரசாணைகள், சட்டப் பிரிவுகள், விதிகள்ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

நியாய விலைக்கடை விற்பனையாளர்  பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும்  இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் கட்டுநர் பணியிடத்திற்கு பள்ளி இறுதி வகுப்பு (SSLC) தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news 

குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது? TNPSC அறிவிப்பு

 குரூப் 2, 2ஏ  முதல் நிலை தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413  பதவிகளுக்கான  குரூப் 2/2ஏ முதல்நிலை தேர் கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. . 11 .78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு (சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது) என மூன்று நிலைகளில் தெரிவு முறை நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட விரிவான ஆட்சேர்ப்பு அறிவிப்பில் ஜுலையில் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும்,  முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எப்போது  தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் தேர்வர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி தொடர்பான  அட்டவணையில் குரூப் 2, 2ஏ  முதல் நிலை தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும்  என குறிப்பிடப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news 

TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 குரூப்4  தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனுடம் மேலும் சில தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

வி.ஏ.ஒ, டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட்,  இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை 24ம் தேதி நடைபெற்றது.

22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 7,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வின் உத்தேச விடைத்தாள் ஆகஸ்ட் மாதம் வெளியானது. தேர்வு நடைபெற்று 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனை போக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி தொடர்பான  அட்டவணையில்  குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல்,  குரூப் 2, 2ஏ  முதல் நிலை தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும்  என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு முடிவுகளும் அப்டோபர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news 

Indian Polity - Salient features of constitution PART 01 |இந்திய அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்

 

Indian Polity - Salient features of constitution PART 01 |இந்திய அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்


நீங்கள் இப்படியெல்லாம் மொபைல் ஃபோன் பார்த்தால் கண்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உறுதி..!

இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் பல நன்மைகள் நமக்கு கிடைத்தாலும் இலவசமாக சில உடல் நலப்பிரச்சனைகளையும் நாம் வாங்க நேரிடுகிறது. குறிப்பாக இன்றைக்கு குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் அனைவர்களிடம் மொபைல் மற்றும் லேப்டாப், கணினி பயன்பாடுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக இதைப் பயன்படுத்தும் போது கண் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு கண் பார்வை இழப்பையும் நமக்கு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

குறிப்பாக வெயிலில் ஸ்மார்ட்போன்களை மக்கள் பயன்படுத்தும் போது, சூரிய ஒளிக்கதிர்களால் நேரடியாக இல்லாமல் போனின் திரை வழியாக பிரதிபலித்து கடுமையான விழித்திரை பாதிப்பு நமக்கு ஏற்படுத்துகிறது. மற்றும் கண்பார்வை முற்றிலும் தெரியாமல் போய்விடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சமீபத்தில் இது தொடர்பாக மருத்துவர்கள் நடத்திய சோதனையில் வெயிலில் மொபைல் போன்களைப் பார்க்கும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள்அனைவரையும் பாதித்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதிக நேரம் வெயிலில் மொபைலைப் பயன்படுத்தும் போது சூரிய கதிர்களின் பிரதிபலிப்பால், விழித்திரையின் பின்புறத்தைப் பாதிக்கும் மாகுலர் டிஜெனரேஷன் என்றழைக்கப்படும் மாகுலோபதி என்ற நோய் பாதிப்பை அடைகின்றனர். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் குருடர்களாக மாற மாட்டார்கள். அதே சமயம், கொஞ்சம் கொஞ்சமாக பார்வை இழப்பைச் சந்திக்கின்றனர். பொதுவாக பெண்களைப் பொறுத்தவரை மொபைலிலிருந்து பிரதிபலிக்கும் சூரிய ஒளியினால் ஆரம்பத்தில் தொலைவில் இருக்கும் பொருள்களின் வடிவங்களை வேறுபடுத்துவதில் சிரமத்தைச் சந்திக்கின்றனர். இப்பிரச்சனை 20 வயதாக இருந்தாலும் சரி 40 வயதாக இருந்தாலும் சரி அனைவரையும் பாதிக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க மொபைல் போன்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் மற்றும் வெயிலில் அதிக நேரம் செல்போன்களை உபயோகிக்கக் கூடாது என அறிவுத்துகின்றனர் மருத்துவர்கள். இதோடு சூரிய கதிர்களை நேரடியாக பார்த்தால் தான் கண்பார்வை பிரச்சனை ஏற்படும் என்பதில்லை,. மொபைல் போன்களில் சூரிய ஒளி பிரதிபலித்து நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கண் பார்வையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்?

மொபைல் போன்கள், லேப்டாப், கணினி போன்றவற்றை பார்க்கும் நேரங்களில் குறைத்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத நேரங்களில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது சற்று உங்களது கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.

செல்போன்களில் ஒளித்திரை நம் கண்களின் மட்டத்திற்கு மேல் இருக்கக்கூடாது. எப்போதும் கண்களுக்கு கீழே தான் இருக்க வேண்டும்.

பகல், இரவு என உங்களது சூழலுக்கு ஏற்ப மொபைல் போனில் ஒளித்திரையின் பிரைட்னஸை மாற்றி அமைக்க வேண்டும். இது கண்களைப் பாதுகாக்க உதவும்.

மொபைல் போன்களில் வீடியோக்களை அல்லது செய்திகளை ஆர்வத்துடன் பார்க்கும் போது கண் சிமிட்ட மறந்துவிடுகிறோம். கண்களில் உள்ள திரவம் தான் நம்முடைய கண்களைப் பாதுகாக்கிறது. கண்கள் வறண்டு போகும் போது வலி, கண்பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் நமக்கு ஏற்படும்.

வெளியில் செல்லும் போது கண் நோய்களிலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க பயனுள்ள சன்கிளாஸ்களை அணியுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயதானவர்கள் கண்களை ஆண்டிற்கு ஒருமுறையாவது பரிசோதித்துக் கொள்ள வேண்டும்

மேற்கண்ட முறைகளில் பாதுகாப்போடு உங்கள் மொபைல் போன்களை நீங்கள் உபயோகித்த பின்னரும் கண்பார்வை பிரச்சனை, கண்களில் வலி இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ள வேண்டும்.


Click here to join whatsapp group for daily health tip 

 

பிளாஸ்டிக்களுக்கு மாற்றுப்பொருள்கள் தயாரிப்பில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு ஓர் அசத்தல் வாய்ப்பு!

 

தமிழகத்தில் தடை செய்யப்பட்டஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டவரா? உங்கள் வணிகத்தில் குறைந்த விலையில் பிளாஸ்டிக்- அல்லாத மாற்றுப் பொருட்களை அடையாளம் காண வேண்டுமா?

அப்படியென்றால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய கண்காட்சி மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கில் கலந்து கொள்ளுங்கள்.

இன்று, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் தொடர்பான தேசிய கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். 150 அரங்குகள்  கொண்ட இந்த கண்காட்சியில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கான மாற்று பொருட்களாக வாழை இலை பொருட்கள், நார்/அரிசி- தவிடு/அரிசி- மட்டை/விவசாய பொருட்கள், பாக்கு இலை பொருட்கள், தேங்காய் மட்டை பொருட்கள், தென்னை நார் பொருட்கள், மட்பாண்ட பொருட்கள், பனை பொருட்கள், துணி/சணல் பொருட்கள் போன்றவைகளை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள்  தங்கள் தயாரிப்புகளையும், இயந்திரங்களையும் காட்சிப் படுத்தி வருகின்றனர். மேலும், இறுதி நாளை, தொழில்முனைவோருக்கான கருத்தரங்கள் நடைபெற உள்ளது. மேலும்,  தொழில் முனைவோர்களுக்கு நிதி ஆதாரங்களை பெறும் வகையில் நிதி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தித் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த தேசிய கண்காட்சிக்கு  அனுமதி முற்றிலும் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பொருட்களை தயாரிக்க முற்படும் தொழில் முனைவோர்களும், ஹோட்டல், சினிமா, கல்யாண மண்டபம்  போன்ற வணிகங்களில் ஈடுபட்டுள்ளவர்களும் இதில்  கலந்து கொண்டு பலனடையலாம்.

முன்னதாக, தமிழக அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை 01.01.2019 முதல் பயன்படுத்த தடை விதித்தது. மேலும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதைத் தவிர்ப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" எனும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.

Click here to join WhatsApp group for Daily employment news 

20,000 பணிகளுக்கான எஸ்.எஸ்.சி தேர்வு: சேலம் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்!

 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பட்டதார் நிலை தேர்வுக்கு (SSC- CGL) தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், தெரிவித்துள்ளதாவது:-

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான (Combined Graduate Level) தேர்வுக்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.

இத்தேர்வுக்கு sscnic.in என்ற இணையதளம் வாயிலாக 08.10.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தேர்விற்கான கல்வித்தகுதி குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன், 01.01.2022 அன்றைய நிலையில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 30 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணமாக ரூபாய் 100/-நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி.எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் (Facilitation Centre) அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 11.10.2022 அன்று இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. மேலும், விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பித்து, இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Click here to join WhatsApp group for Daily employment news 

ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்...

 ஸ்வீட் கார்ன் யாருக்குத்தான் பிடிக்காது. இப்போதெல்லாம் பீட்சா, பாஸ்தா, பர்கர் முதல் சாலட் வரை சுவையை அதிகரிக்க ஸ்வீட் கார்ன்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஸ்வீட் கார்ன் அதன் சுவைக்கு மட்டுமல்ல, அற்புதமான நன்மைகளையும் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

சோளத்தில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதில் பயனுள்ளதாக இருக்கும். இது செல் உருவாக்கத்தில் தொடங்கி உடலின் அனைத்து முக்கிய செயல்முறைகளையும் ஊக்குவிக்கிறது. ஸ்வீட் கார்னின் மற்ற ஆரோக்கிய நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்.

ஸ்வீட் கார்ன் ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் ஒரு சிறந்த சிற்றுண்டியாக விளங்குகிறது. இனிப்பு சோளத்தில் கொழுப்புகள், சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், வைட்டமின் சி மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது.

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் : StyleCraze.com படி, இனிப்பு சோளத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்தத்தை ஜெல் ஆக மாற்றுவதன் மூலம் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஸ்வீட் கார்னில் கரோட்டினாய்டுகள் மற்றும் பயோஃப்ளவனாய்டுகள் உள்ளன. அவை இரத்தத்தில் உள்ள கொழுப்பைப் பராமரிக்கின்றன.

சிறந்த செரிமானம் : ஸ்வீட் கார்னில் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளிலும் ஸ்வீட் கார்ன் மிகவும் நன்மை பயக்கும்.

நீரிழிவு நோய் தடுப்பு : ஸ்வீட் கார்னில் உள்ள வைட்டமின் பி புரதம், லிப்பிட், கார்போஹைட்ரேட், வளர்சிதை மாற்றம் மற்றும் பைட்டோ கெமிக்கல்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது. ஸ்வீட் கார்னில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவு. எனவே இது நீரிழிவு நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கண் பார்வையை மேம்படுத்துகிறது : ஸ்வீட் கார்னில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது பார்வையை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். கண்களில் உள்ள கரோட்டினாய்டுகள் மாகுலர் சிதைவையும் குறைக்கின்றன.

Click here to join whatsapp group for daily health tip 

சிறுநீர் இந்த நிறத்தில் இருந்தால் அலட்சியமாக இருக்காதீங்க..? எப்போது மருத்துவரை அனுக வேண்டும்..?

 

சிறுநீரின் நிறம் நமது உடலின் ஆரோக்கியத்தைப் பற்றிய பல தகவல்களை உணர்த்தும். எந்த ஒரு நோயின் தீவிரம் அதிகரித்தாலும், அதன் விளைவு சிறுநீர் அல்லது சிறுநீரின் நிறத்தில் தெரிய ஆரம்பிக்கும். சில நேரங்களில் எந்த அறிகுறியும் இல்லாமல் நிறம் மாறலாம். உடலில் ஒரு அன்க்ரோமிக் நிறமி உள்ளது. இதன் காரணமாக சிறுநீரின் நிறம் உருவாகிறது. இந்த நிறமி அதிகமாக செறிவூட்டப்பட்டால், சிறுநீரின் நிறம் மாறும்.

பொதுவாக சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் மற்றும் சற்று பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் உடலில் அதிக அளவு திரவம் இருந்தால் அது சிறுநீரின் நிறத்தை மாற்றுகிறது. மயோகிளினிக்கின் கூற்றுப்படி, சிறுநீரின் நிறம் வழக்கத்திற்கு மாறாக இருந்தால், அது ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம். அப்படி சிறுநீர் எந்தெந்த நிறத்தில் இருந்தால் ஆபத்து என்று பார்க்கலாம்.

எந்த சூழ்நிலைகளில் ஆபத்து..?

சிவப்பு நிறம் - சிறுநீரின் நிறம் சிவப்பு நிறமாக மாறினால், அது ஒரு தீவிர பிரச்சனையாக இருக்கலாம். இது சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை தொற்று காரணமாக இருக்கலாம். சிறுநீர் கழிக்கும் போது வலி இல்லாமல், சிறுநீரின் நிறம் சிவப்பு நிறமாக இருந்தால், அது மேலும் கவலைக்குரிய விஷயம். அத்தகைய சூழ்நிலையில், புற்றுநோயின் அபாயமும் அதிகரிக்கும்.

அடர் மற்றும் ஆரஞ்சு நிறம் - சிறுநீரின் நிறம் அதிக கருமையாகவோ அல்லது ஆரஞ்சு நிறமாகவோ இருந்தால் அதுவும் நோயின் அறிகுறியாகும். குறிப்பாக மலத்தின் நிறமும் மாறியிருந்தால் கடுமையான கல்லீரல் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம்.

எப்படி கண்டுபிடிப்பது..?

பொதுவாக, உடலில் உள்ள திரவத்தை பொறுத்து சிறுநீரின் நிறம் தீர்மானிக்கப்படுகிறது. உடலில் திரவம் எவ்வளவு அதிகமாக செல்கிறதோ, அவ்வளவு அதிகமாக சிறுநீரில் மஞ்சள் நிறமியை நீர்த்துப்போகச் செய்யும். அதிக தண்ணீர் குடித்தால் சிறுநீரின் நிறம் தெளிவாகும். குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் சிறுநீரின் நிறம் மஞ்சள் நிறத்துடன் சேர்ந்து கெட்டியாக மாறும். எனவே, சிறுநீரின் நிறம் உண்ணும் உணவு மற்றும் அருந்தும் பானங்களை பொறுத்தது. பீட்ரூட், ஜாமூன் அல்லது சில மருந்துகளை உட்கொண்டால், சிறுநீரின் நிறம் பச்சை, மஞ்சள், நீலம் போன்றவையாக இருக்கலாம்.

எனவே, ஒவ்வொரு முறையும் சிறுநீரின் நிறம் மாறும்போது ஏதாவது ஒரு நோய் வரும் அபாயம் உள்ளது. ஆம், நிறமி இல்லாத உணவை சாப்பிடாமலே அல்லது குடிக்காமலே சிறுநீரின் நிறம் அசாதாரணமாக மாறினால், அது சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்..?

சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீரகத்தில் கல் இருந்தாலோ, சிறுநீரின் நிறம் ரத்தத்தின் நிறம் போல் இருக்கும். பொதுவாக, சிறுநீர் கழிக்கும் போது வலி இருக்கும், ஆனால் வலி இல்லாமல் சிறுநீரின் நிறம் இரத்தமாக இருந்தால், அது ஆபத்தின் அறிகுறியாகும்.

சில நேரங்களில், சிறுநீர் பாதையில் பாக்டீரியா தொற்று காரணமாக, சிறுநீரின் நிறமும் நீலமாக மாறும். இது ஹைபர்கால்சீமியா அல்லது நீல டயபர் ( blue diaper syndrome ) நோய்க்குறியின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரின் நிறம் கருமையாகவோ அல்லது ஆரஞ்சு நிறமாகவோ மாறினாலும், அது ஒரு எச்சரிக்கை அறிகுறிதான். இது போன்ற சூழ்நிலைகளில் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அனுகுவது அவசியம்.


Click here to join whatsapp group for daily health tip 

தினசரி வெந்நீர் குடிப்பதை உங்கள் பழக்கமாக்கிக்கொண்டால் இவ்வளவு நன்மைகளை பெறலாமா..? மிஸ் பண்ணாதீங்க..

 நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, தண்ணீர் குடிப்பது அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீரை குடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஆரோக்கியம் சீராக இருக்க 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் தினசரி எடுத்து கொள்வது அவசியம். அன்றாடம் குடிக்கும் நீரில் வெந்நீர் இடம் பெறுவது தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை மேலும் அதிகரிக்கும். பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் நித்திகா, சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் தினசரி வெந்நீரை குடிப்பதால் கிடைக்கும் பல நன்மைகளை பற்றிய தகவல்களை ஷேர் செய்து உள்ளார்.

இது தொடர்பான இன்ஸ்டா போஸ்ட்டின் கேப்ஷனில் "நல்ல ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்! ஆனால் நீங்கள் உண்மையில் தண்ணீரின் நன்மைகளை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்ல விரும்பினால், சூடான நீர் நல்ல வழி" என்று குறிப்பிட்டு உள்ளார்.

மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் : குளிர் காலம் கடுமையாக இருக்கும் இந்த நேரத்தில் மூக்கு அடைப்பது மிகவும் சங்கடமான ஒன்றாக இருக்கும். ஒரு கப் சூடான தண்ணீர் குடிப்பது மூக்கடைப்பை குறைக்க உதவுகிறது.

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் : மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்று உடல் நீரிழப்பை சந்திப்பது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் சுடு தண்ணீரைக் குடிப்பது குடல்களை மீண்டும் சாதாரணமாக இயக்க ஒரு சிறந்த வழி என்று டாக்டர் நித்திகா கூறி இருக்கிறார்.

முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் : டாக்டர். நித்திகாவின் கூற்றுப்படி தினசரி வெந்நீரைக் குடிப்பது நம் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் : மாதவிடாயின் போது சீரான இடைவெளியில் வெந்நீரைக் குடிப்பதன் மூலமும் வலிமிகுந்த மாதவிடாய் பிடிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்கிறார் டாக்டர் நித்திகா.


சரும பராமரிப்பு : டாக்டர் நித்திகாவின் கூற்றுப்படி, தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வருவது சருமம் வயதாவதை தடுக்கிறது மற்றும் முகப்பரு, தழும்புகளை நீக்குகிறது.

செரிமான மேம்பாடு : காலை நேரங்களில் உணவிற்கு முன் வெந்நீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது என்று டாக்டர் நித்திகா கூறி இருக்கிறார். இப்பழக்கம் வயிற்று உப்புசம், அசிடிட்டி மற்றும் வாயுவை குணப்படுத்துகிறது.

உடலை டீடாக்ஸ் செய்கிறது : சூடான அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்குகிறது மற்றும் ஃபோர்ஜின் எலமென்ட்ஸ் மற்றும் நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் உடல் அமைப்பை சுத்தப்படுத்துகிறது என்றும் கூறி இருக்கிறார் டாக்டர் நித்திகா.


Click here to join whatsapp group for daily health tip 

ரீஃபைண்ட் ஆயில் ஒரு நாளைக்கு எந்த அளவில் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது..? கட்டுப்படுத்தும் வழிகள்...

 சாட்-பக்கோடாக்கள், பூரி-கச்சோரிஸ் என வறுத்த காரமான உணவுகளை சாப்பிட மிகவும் சுவையாக இருந்தாலும், அளவுக்கு அதிகமான பயன்பாடு கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே என்னதான் எண்ணெய் உணவின் சுவையை அதிகரித்தாலும் உடல் நலம் கருதி குறிப்பிட்ட அளவில் பயன்படுத்துவது அவசியம்.

காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவு எந்த உணவாக இருந்தாலும் எண்ணெய் இல்லாமல் அந்த உணவு சாத்தியமில்லை. சமையல் எண்ணெயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மட்டுமின்றி, கொழுப்புகளின் களஞ்சியமாகவும் உள்ளது. இதனாலேயே உணவில் எண்ணெய்யின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்.

குறிப்பாக நீங்கள் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதன் அளவு குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு எவ்வளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயின் சரியான அளவு என்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணெயின் ஊட்டச்சத்தும் முக்கியமானது. ஏனெனில் இது ஆரோக்கியமான தோல், முடி மற்றும் எலும்புகளை பராமரிக்க உதவுகிறது. Harzindagi.com குறிப்பிட்டுள்ள அளவுபடி, ஆரோக்கியமான உடலுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை உட்கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு 20 கிராமுக்கு மேல் எண்ணெய் பயன்படுத்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் எண்ணெயின் அளவைக் குறைக்கலாம். அதேபோல் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் இருந்து உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்.

எப்படியெல்லாம் எண்ணெய் உபயோகத்தை குறைக்கலாம்..?

- எண்ணெயில் நன்கு வறுத்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

- ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி எண்ணெயில் காய்கறிகளை சமைக்க முயற்சி செய்யுங்கள்.

- வேகவைத்த உணவை உண்ணும் மாற்று வழிகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

- சாலட்டின் சுவையை அதிகரிக்க ஆயில் டிரஸ்ஸிங் செய்வதை தவிர்க்கலாம்.

- சரியான எண்ணெய் பிராண்டுகளை தேர்வு செய்து பயன்படுத்தவும்.

Click here to join whatsapp group for daily health tip